பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

487


நாள் வரையிலும், நாங்களும் புரட்சிக்காரர்களாகவே இருப்போம். யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள். அந்தச் சமுதாயத்துக்கும், உங்களுக்கும் எதிரிகள் நாங்கள். எங்களது போராட்டத்தில் நாங்கள் வெற்றி காணும்வரை நமக்குள் எந்தவிதமான சமாதானமும் ஏற்படப்போவதில்லை, தொழிலாளர்களாகிய நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்! உங்கள் எஜமானர்களோ, அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோலப் பலசாலிகள் ஒன்றுமில்லை! தனி நபர் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், பெருக்கிக் காப்பதற்காகவும், பெருக்கிக் குவிப்பதற்காகவும் தங்களது அதிகாரத்தால், லட்சோப லட்ச மக்களை அடிமைப்படுத்தவும் கொன்று குவிப்பதற்காகவும் உதவிக்கொண்டிருக்கும் தனிப்பட்ட சொத்துரிமைதான்,–எங்கள்மீது ஆட்சி செலுத்த அவர்களுக்குப் பலம் தரும் அந்தச் சக்திதான்—அவர்களுக்குள்ளாகவே தகராறுகளைக் கிளப்பிவிடுகிறது. அந்தச் சொத்துரிமை அவர்களை உடல் பூர்வமாகவும், உள்ள பூர்வமாகவும் சீர்குலைத்து வருகிறது. தனிச் சொத்துரிமையைக் காப்பது என்பது சாமான்யமான காரியம் அல்ல. உண்மையைச் சொல்லப்போனால், எங்களது எஜமானர்களாயிருக்கும் நீங்கள் அனைவரும் எங்களையும்விட மோசமான அடிமைகளாயிருக்கிறீர்கள், நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம்; நீங்களோ உள்ள பூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள்! உங்களை உள்ள பூர்வமாகக் கொன்றுவிட்ட நுகக்காலிலிருந்து, வெறுப்பு விருப்புப் பழக்கதோஷமென்னும் நுகத்தடியின் பளுவிலிருந்து, உங்களை விடுவித்துக் கொள்வதற்கு நீங்கள் சக்தியற்றுப் போய்விட்டீர்கள். ஆனால் நாங்கள் சுதந்திரமான உள்ளத்தோடிருப்பதை எந்த சக்தியுமே கட்டுப்படுத்தவில்லை. உங்களது இஷ்டத்துக்கு மாறாக, நீங்கள் எங்களது உணர்விலே பெய்துகொண்டிருக்கும் முறிவு மருந்துகளாலேயே, நீங்கள் எங்களுக்கு ஊட்டிவரும் விஷங்க ளெல்லாம் வலுவற்று முறிந்துபோகின்றன. எங்களது சத்திய தரிசனம் எந்தவிதத் தடையுமின்றி, அசுர வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கிறது; மேலும் அந்த சத்தியம் நல்ல மனிதர்களை — உங்களது சமூகத்திலேயே மனத்தைப் பறிகொடுக்காது தப்பிப்பிழைத்த நல்லவர்களை — எல்லோரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. உங்களது வர்க்கத்தை நேர்மையான ஒழுங்குமுறையோடு பாதுகாப்பதற்கு உங்களிடம் ஒருவரும் இல்லையென்பதை நீங்களே பாருங்கள்! சரித்திர பூர்வமான நியாயத்தின் அழுத்த சக்தியிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள்