504
மக்சீம் கார்க்கி
அவள் அவனைப் பார்த்தாள். பதில் சொன்னாள்.
“எனக்குத் தந்தை கிடையாது.”
“செத்துப் போனாரா?”
“இல்லை. சாகவில்லை” அவளது குரலில் ஏதோ ஒரு அழுத்தமும் உறுதியும் குடிபுகுந்தன; அது அவள் முகத்திலேயே பிரதிபலித்தது. “அவர் ஒரு நிலப்பிரபு. இப்போது ஜில்லா அதிகாரி; அவர் விவசாயிகளைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்.”
“ ஹூம்” என்று முனகினான் சிஸோவ். அதற்குப் பின் நிலவிய அமைதியில் அவன் அவள் பக்கமாக நடந்து சென்றான், அவள் பக்கமாக அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டான்.
“சரி, அம்மா. நான் வருகிறேன்” என்று கூறினான் அவன்; “நான் இடது பக்கமாகத் திரும்புகிறேன். பெண்ணே ! போய் வருகிறேன். அப்பாவிடம் கடுமையாயிருக்கிறீர்கள். இல்லையா? ஆமாம், அது உங்கள் விஷயம்......”
“உங்கள் மகன் நல்லவனாக இல்லாமலிருந்தால், ஜனங்களைக் கொடுமை செய்தால், நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டால், நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள். இல்லையா?” என்று உணர்ச்சியோடு சொன்னாள் சாஷா.
“ஆமாம். ஒருவேளை” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் சிஸோவ்.
“அதாவது மகனைவிட, நீதிதான் உங்களுக்கு அருமை வாய்ந்தது என்று அர்த்தம், இல்லையா? அதுபோலத்தான் எனக்கும், தர்மம்தான் என் தந்தையைவிட அருமையாயிருக்கிறது.....”
சிஸோவ் புன்னகை செய்தான். தலையை ஆட்டிக்கொண்டான்.
“சரி. நீங்கள் ஒரு புத்திசாலிப்பெண். நீங்கள் மட்டும் இதைக்கொண்டு செலுத்தினால், கிழவர்களைச் சமாளித்துவிடுவீர்கள். உங்களுக்கு அழுத்தம் அதிகம். உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகட்டும். ஜனங்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாயிருக்கப் பாருங்களேன்! நீலவ்னா, நான் வருகிறேன், பாவெலை நீ பார்த்தால், நான் அவன் பேச்சைக் கேட்டதாக அவனிடம் சொல், அந்தப் பேச்சு பூராவும் புரியவில்லை. சமயத்தில் ஓரளவு பயங்கரமாய்க்கூட இருந்தது. ஆனால் டெபாதுவாக, அவன் சொன்னதுதான் ரொம்ப சரி.”
அவன் தன் தொப்பியை எடுத்து வணங்கிவிட்டு, தெரு மூலையைக்
கடந்து திரும்பினான்.