பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

ஒன்றும் செய்ய முடியாதென்று கூறினாள். அந்தக் கொடிய எருதுகளை எப்படி அடக்க வேண்டும் என்றும், பாம்பு விதையிலிருந்து கிளம்பும் வீரர்களை எப்படி யழிக்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டு அவள் போய்விட்டாள். அவள் சென்றபிறகு வெற்றிவேலன் தன் மரக்கலத்திற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டான்.

மறுநாள் கலையில் குறிப்பிட்ட நான்கு காணி நிலத்தையும் சுற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். சாவைச் சந்திக்க வந்திருக்கும் வெளிநாட்டு வீரனைச் சந்திக்கக் காத்திருந்தார்கள். ஓர் உயர்ந்த மேடையின் மீது அரசனும் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தாாகள்.

நிலத்தின் மத்தியில் அந்தப் பயங்கர எருதுகள் பலமான கயிறுகளால் கட்டப்பட்டு நின்று கொண்டிருந்தன அவற்றின் மூக்கிலிருந்து நெருப்பு குப்குப்பென்று வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த எருதுகளிடம் அகப்பட்டு மடிய எங்கிருந்தோ வந்திருக்கிறானே இந்த வெற்றிவேலன் என்று மக்கள் அவனுக்காக இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மேகமாலை ஒருத்தியைத் தவிர எல்லோரும் அவன் இறுதிக் காலம் வந்துவிட்டதென்றே எண்ணிக் கொண்டிருந்தார்கள்.