பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

21


        செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
        செய்யாமை யானும் கெடும். (466)

இப்படிப் பொதுவாக கூறிவிட்டால், நமக்கு என்ன விளங்குகிறது? செய்யத் தக்கது எது? செய்யத் தகாதது எது? என்பது புரிய வேண்டாமா? என எண்ணுகிறோம். திருக்குறள் அந்த அளவிற்கும் சென்று நமக்கு விளக்குகிறது.

செய்யத் தக்கவை

1. நாட்டிற்கும் மொழிக்கும் தனக்கும் பிறருக்கும் நன்மையளிக்கும் செயல்கள் அனைத்தும் இன்பம் பயக்கும் செயல்கள். அச் செயல்கள் அனைத்தையும் செய். மேலும் அவற்றைச் செய்யும்பொழுது பலரால் பலவிதமான துன்பங்கள் பலவேறு வழிகளில் வந்து உன்னைத் துன்புறுத்தும். அப்பொழுதும் அத்துன்பங்கள் அனைத்தையும் கடந்து நின்று நற்செயல்களைச் செய்து முடிக்கவேண்டும்.

        துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
        இன்பம் பயக்கும் வினை. (669)

2. பழியையும் பாவத்தையும் உண்டாக்குகின்ற தீயசெயல்களில் எதையும் செய்துவிடாமல், இன்பத்தையும் புகழையும் தருகின்ற அறச்செயல்கள் அனைத்தையுமே செய்து மகிழ்.

        செயற்பால தோரும் அறனேஒருவற்கு
        உயற்பால தோரும் பழி. (40)

தி—3