77
அவைகளினால் உண்டாகின்ற ஆசைக் குற்றங்களைக் களைந்து அடக்கி நீக்குதல் என்பதே பொருளாகும். எனவே, அப்படிப்பட்ட ஆற்றல் நிறைந்தவர்களின் பெருமையினை இக் குறட்பாவினால் சிறப்பித்தார்.
முனிவர்களின் சிறப்பினைக் கூறவந்த இடத்தில் இந்திரன் கதையினையும் குறிப்பிட்டார். இந்திரனே அழிக்கப்பட்டு விடுவான் என்பதாம். தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனானவன் இந்திரன். அவர்களுடைய அரசனே இந்திரன். இவனைத் தேவேந்திரன் என்றும் கூறுவர். இவன் இந்திர போக இன்பம் என்று சொல்லப்படுகின்ற அவ்வளவு இன்பத்தினை அனுபவிப்பவன்.
இப்படிப்பட்டவனே முனிவர்களின் ஆற்றலினல் அழிந்தான் என்பதாகும். இதுதான் இக்குறட்பாவில் கூறப்பட்டுள்ள கதையாகும். ஐந்தினையும் அடக்கிய முனிவர்களுடைய ஆற்றல் மிகச் சிறந்த தென்பது உலகறிந்த - இயற்கையோடியைந்த உண்மையாகும். அதனைச் சிறப்பித்தலே ஆசிரியரின் குறிக்கோளும் கொள்கையுமாகும்.
ஐயங்கள் :
திருக்குறளில் சில இடங்களில் பழங்காலப் புராண இதிகாச கதைக் குறிப்புகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று விசும்புளார் என்று குறிக்கப்படுகின்ற வானவர்களின் கோமானாகிய இந்திரன் எனப்படும் தேவர்களின் அரசனானவன் அழிந்த கதையுமாகும்.
இப்படிப்பட்ட கதைக் குறிப்புகள் வருகின்ற இடத்தில் திருக்குறள் படிக்கும் அன்பர்களுக்கு ஐயப்பாடுகள் தோன்றுகின்றன. அந்த ஐயங்களைத் தெளிவு படுத்துதல் நமது கடமையாகும்.