பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

திருக்குறள்


3.கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றறிந்தவர்கள் கூடியுள்ள சபையில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்களானால், கல்வியறிவு சிறிதும் இல்லாதவர்களும் மிகவும் நல்லவர்களேயாவார்கள். (அவ்விதம் இருக்கமாட்டார்கள் என்பது பொருள்.)

நனி நல்லர்-மிகவும் நல்லவர்கள்; அமைதியாக இருத்தல் - அவர்களால் இயலாது என்பதை விளக்க 'இருக்கப் பெறின்’ என்றார். 403

4.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதவனின் அறிவுடைமை சில சமயங்களில் மிகவும் சிறந்ததாக இருந்தாலும், கற்றறிந்த பெரியோர்கள் அவனை அறிவிற் சிறந்தவனாகக் கொள்ள மாட்டார்கள்.

நத்தை ஊர்ந்து செல்லும்போது தற்செயலாக உண்டாகும் எழுத்துப் போல அவ்வறிவு தற்செயலாக ஏற்பட்டது ஆதலின் 'கொள்ளார்’ என்றார்.

ஒட்பம்-அறிவுடைமை; கழிய-மிகுதியும். 404

5.கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாத ஒருவன் தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் மதிப்பு, அவன் நூல்களைக் கற்றாரிடம் சென்று பேசும் போது கெட்டொழியும்.

தகைமை-மதிப்பு; தலைப்பெய்தல்-கூடுதல், காணுதல்; சொல்லாடல் -பேசுதல்; சோர்வுபடல்-கெட்டொழிதல் 405

6.உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர் மனிதத் தோற்றத்தோடு இவ்வுலகில் இருக்கின்றனர் என்னும் அளவிலேதான் காணப்படுகின்றனர். இதையன்றி, வேறு ஒன்றும் சொல்லுதற்குரியரல்லர். அவர் பார்ப்பதற்கு நிலம் போலத் தோன்றி, விளைவுக்குப் பயன்படாத களர் நிலத்துக்குச் சமமாவர்.