பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

திருக்குறள்


குடி உயர்வினும் கல்வி உயர்வே சிறந்தது என்பது கருத்து.

மேற் பிறந்தார்-செல்வம், பதவி, ஒழுக்கம் முதலியவைகளால் உயர்ந்த் குடியிலே பிறந்தவர்; பாடு-பெருமை. 409

10.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

சிறந்த நூல்களைக் கற்றவர்களுக்கும், கல்வியறிவில்லாத மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறிவோடு கூடிய மக்களுக்கும், அஃதில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறுபாட்டுக்குச் சமமாம்.

கல்லாதவர் வடிவத்தில் மக்களாக இருந்தும் அறிவு, குணம், செயல்களில் மிருகத்துக்குச் சமம் ஆவர் என்பது கருத்து.

அனையர்-அத்தகைய வேறுபாடுடையவர்;. இலங்கு நூல் - அறிவு விளக்கத்துக்குக் காரணமான நூல்கள்; ஏனையவர்-மற்றையவர், இங்கே கல்லாதவரைக் குறிக்கும். 410

42. கேள்வி


1.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செல்வங்கள் பலவற்றுள்ளும் செவியால் கேட்டு அறியும் செல்வமே சிறந்த செல்வம் ஆகும். ஏனென்றால், அச்செல்வமே பிற எல்லாச் செல்வங்களிலும் முதன்மையானதாக இருக்கின்றது. 411

2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவிக்கு உணவாகிய கேட்டறிதல் என்பது இல்லாத போது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கலாம்.

நமக்குக் கேட்டறிதல் முதன்மையானது: வயிற்றிற்கு உணவு அதற்கு அடுத்தது என்பதே இப்பாட்டின் பொருள். வயிற்றுக்கும் என்பதும் ஈயப்படும் என்பதும் இழிவு தோன்ற நின்றன. மிகுதியாக உண்ணுதல் அறிவு விளக்கத்திற்குக் கேடாதலால் 'சிறிது’ என்றார். 412