பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுற்றம் தழால்

135


தொழில் செய்கின்றவன் சரியாகத் தன் வேலையைச் செய்து வருவானானால், அந்த வேலையில் சம்பந்தப்பட்ட பிற மக்களும் ஒழுங்கு பெற வாழ்ந்து வருவர். ஆதலால், அத்தகைய பொறுப்பு வாய்ந்த வினையைச் செய்வானிடம், அரசன் நாள் தோறும் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். 520

53. சுற்றம் தழால்


1.பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.

செல்வம் நீங்கி வறியவன் ஆன போதும் அவனோடு தமக்கு முன்பே இருந்த பழைய தொடர்பினை நினைந்து புகழ்ந்து பேசும் குணங்கள் சுற்றத்தாரிடத்தில் தான் உள்ளன.

சுற்றம் தழால்-தன்னைச் சூழ்ந்துள்ளவர்களை எக்காலத்தும் விடாமல் தழுவிக் கொண்டிருத்தல்; சுற்றம்-உறவின் முறை; அரசர்க்கு அமைச்சர், சேனைத் தலைவன் முதலியோர் சுற்றத்தினர் ஆவர். 521

2.விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.

அன்பு நீங்காத சுற்றத்தினர் ஒருவனுக்குக் கிடைத்தால், அஃது அவனுக்கு மேன் மேலும் வளர்ச்சியில் குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்

அருப்பு அறா ஆக்கம்-கிளைத்தல் அறாத செல்வம். வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வம்; அருப்பு-அரும்பு. 522

3.அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாரோடு மனங்கலந்து உறவாடாதவன் வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாது நீர் நிறைந்தாற் போலும்.

குளவளா-குளப்பரப்பு; கோடு-கரை.

கரையில்லாத குளம் நீர் நிரம்புதல் அரிது. அது போல் சுற்றத்தாரோடு மனங்கலந்து உறவாடாத வாழ்க்கை, வாழ்க்கை அன்று என்பது பொருள். 523