பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

திருக்குறள்


8.புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

அறிஞர்களால் சிறந்தவை என்று பாராட்டிச் சொல்லப்படும் செயல்களைப் போற்றிச் செய்தல் வேண்டும்; அவ்விதம் செய்யாமல், அவற்றை மறந்தவர்க்கு ஏழு பிறப்புக்களிலும் நன்மை இல்லை. 538

9.இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

ஒருவர் தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியாலே தாம் இறுமாந்திருக்கும் போது, அவ்வாறு இருந்து அதன் காரணமாக வந்த மனச் சோர்வினால் அழிந்து போனவர்களை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

இகழ்ச்சி-மனச் சோர்வு; உள்ளுக-எண்ணிப் பார்ப்பாராக; மைந்துறுதல்-இறுமாந்திருத்தல், மறந்திருத்தல். 539

10.உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

ஒருவர் தாம் அடைய எண்ணியதை உள்ளச் சோர்வில்லாமல் நினைந்து வரக் கூடுமானால், அவர் தாம் எண்ணியதை அடைதல் எளிதாகும்.

உள்ளியது-எண்ணியது; எய்தல்.அடைதல்; மன்-அசைநிலை; உள்ள-நினைக்க, இடை விடாது நினைக்க.

உள்ளச் சோர்வினை ஒழிப்பதற்கு இடைவிடாது நினைத்தல் வேண்டும். 540


55. செங்கோன்மை


1.ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, அவன் வேண்டியவன் என்று அவன் மீது தாட்சண்யம் காட்டாமல், நடுநிலைமையோடு இருந்து, அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து செய்யத் தக்கதைச் செய்வதே நீதி முறை ஆகும்.