பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடுங்கோன்மை

143



எண்பதத்தான்-எவரும் எளிதில் வந்து தம் குறைகளை சொல்லக் கூடிய வகையில் எளிமையாக இருப்பவன்; ஓரா-ஆராய்ந்து பாராத; முறை செய்யா-நீதிமுறை செய்யாத; தண்பதம்-தாழ்ந்த பதவி; தானே கெடும்-பகைவரில்லாமலேயே தானே அழிந்து போவான். 548

9.குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

குடி மக்களைப் பிறர் துன்புறுத்தாதபடி காத்து, தானும் அவர்களை வருத்தாமல் காப்பாற்றிக் குற்றம் நேர்ந்தால், அக்குற்றத்துக்குத் தக்க வண்ணம் தண்டனை விதித்து அக்குற்றத்தைப் போக்குதல் அரசனுக்கும் பழி ஆகாது. அஃது அவன் கடமையே ஆகும்.

புறங்காத்தல்-காப்பாற்றுதல்; ஒம்புதல்-காப்பாற்றுதல், ஆதரவு தருதல்; குற்றம் கடிதல்-குற்றத்துக்குத் தக்க தண்டனை விதித்து அக்குற்றத்தை ஒழித்தல்; வடு-பழி, குற்றம். 549

10.கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.

எந்த வகையினாலும் திருத்த முடியாமல் மிகவும் கொடியவர்களாய் இருப்போரை, அரசன் கொலைத் தண்டனை மூலம் தண்டித்தல், உழவன் நெற்பயிரைக் காப்பாற்றுவதற்காகக் களையைப் பிடுங்கி எறிவதற்குச் சமம் ஆகும்.

ஒறுத்தல்-தண்டித்தல்; பைங்கூழ்-நெற்பயிர்; களை கட்டல்-இடையூறாக இருப்பவர்களைப் போக்குதல்; நேர்-சமம். 550

56. கொடுங்கோன்மை


1.கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்(கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, நீதி அல்லாத செயல்களைச் செய்து ஒழுகும் அரசன், கொலைத் தொழிலைச் செய்வோரினும் கொடியவன் ஆவான்.