பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

திருக்குறள்


4.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

உலக நிந்தனைக்குப் பயந்து நேர்மையான வழியிலே பொருளைத் தொகுத்தல் வேண்டும். அப்பொருளை ஏனையவர்க்குப் பகுத்து உதவுதல் வேண்டும். மிகுந்ததனைத் தானும் தன் குடும்பத்தாரும் உண்ணுதல் வேண்டும். இல்லற வாழ்க்கை ஒருவனுக்கு இவ்விதம் நிகழ்ந்தால் அவன் குடும்பக் கால்வழி இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்கும்.

பாத்தூண்-பகுத்து உண்ணுதல்: வழி - கால்வழி, பரம்பரை; எஞ்சல் -ஒழிதல்; எஞ்ஞான்றும்-எப்போதும். 44

5.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்வான் என்பவன் எல்லோரிடத்தும் அன்பாக இருக்கும் தன்மையும், நல்வழியில் ஒழுகும் -செயலும் உடையவனாக இருத்தல் வேண்டும். அவ்விதம் இருத்தலே இல்வாழ்க்கையின் சிறந்த தன்மை ஆகும். அவ்வாழ்க்கையில் அடையும் பயனும் அதுவே ஆகும். 45

6.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

நீதி நூல்களில் கூறியுள்ளபடி ஒருவன் இல் வாழ்க்கையைத் தவறாது நடத்தி வருவானானால் அவன் பிறகு துறவறத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவ்வுலக இன்பம், மறுவுலக இன்பம் எல்லாவற்றையும் இல்வாழ்க்கையிலிருந்தே அவனால் அடைய முடியும். 46

7.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இவ்வாழ்க்கையில் இருந்து அவ்வில்வாழ்க்கைக்கு உரிய இயல்போடு கூடி வாழ்வது சிறப்புடையது. அவ்வாறு வாழ்பவன் ஐம்புலன்களையும் அடக்கித் தம் வயப்படுத்த முயற்சி செய்யும் எல்லாரினும் சிறந்தவன் ஆவான்.

முயல்வார்-ஐம்புலன்களையும் அடக்கித் தம் வயப்படுத்த முயற்சி செய்பவர்; அறிய முயல்பவர் என்றும் கூறுவர். 47