பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைத் துணைநலம்

15


தவறாது வழிபடுவாளாயின், அவள், பெய்” என்று சொல்ல மழை பெய்யும்.

மழை மட்டுமல்லாமல் பிற இயற்கைப் பொருள்களும் அவள் சொல்வழிப் பணியாற்றும் என்றும் கூறுவர். 55

6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்பினின்றும் வழுவாமல் தன்னைத் தானே காத்துக் கொள்வது ஒரு மனைவியின் கடமை. தன்னை மனைவியாகக் கொண்ட கணவனை உணவு முதலியவற்றால் உபசரிப்பது அவளது இயல்பு. தன்னிடத்தும் தன் கண்வனிடத்தும் நன்கமைந்த புகழ் தம்மை விட்டு நீங்காத வகையில் நற்குண நற்செயல்களை மறவாது இல்வாழ்க்கை நடத்துதல் அவளது பெருமை. இத்தகைய இயல்புகள் வாய்ந்தவளே பெண்.

பேணுதல்-உபசரித்தல்; தகைசான்ற-நன்மையமைந்த; சொல்-புகழ்; சோர்வு-மறத்தல். 56

7.சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்; மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மதில், வாயிற் காவல் முதலியவற்றால் பெண்களைக் காவல் செய்வது என்ன பயனைத் தரும்? அவர்கள் தமது நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தித் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காவலே மேலான காவலாகும்.

சிறை-மதிற் காவல், வாயிற் காவல் முதலியன; நிறை- நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல்; தலை-மேன்மையுடையது. 57

8.பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

தம் கணவரை முறையோடு உபசரிக்கும் இயல்பினைப் பெற்ற மனைவியர் தேவர்கள் வாழ்கின்ற உலகத்திலே இருப்பதாகக் கூறப்படும் பெரிய சிறப்புக்களையும் இவ்வுலகத்திலேயே பெறுவர்.

பெற்றான்- (மனைவியாகப்) பெற்றவன், கணவன்; பெறின்-(உபசரிக்கும் இயல்பைப்) பெற்றால்; புத்தேளிர்- தேவர்கள்.