பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்புடைமை

269



சான்றவர்-பல நற்குணங்களும் நிறைந்தவர்; இரு நிலம்-பெரிய உலகம்; பொறை-பாரம்; மன் ஓ என்னும் இரண்டும் இரக்கப் பொருளைக் காட்டவந்த இடைச் சொற்களாகும். 990 }}

100. பண்புடைமை


1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

யாவரிடத்தும் அவர்கள் எளிதாகக் கண்டு உரையாடக் கூடிய தன்மையில் இருப்பதால், பண்புடையவராக வாழும் நல்ல வழியை அடைதல் எளிதென்று அறிஞர் சொல்லுவர்.

யாவரிடத்தும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை தானே வந்து எய்தும் என்பதாம்.

எண்பதும்-எவரும் எளிதாகக் காணக்கூடிய தன்மை, பண்புடைமை -ஒத்த அன்பினராய்க் கலந்து ஒழுகும் தன்மை; வழக்கு-வழி; என்ப -என்று சொல்லுவர். 991

2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

அன்புடையவராக இருத்தலும் உயர்ந்த குடிபிறப்பு உடையவராக இருத்தலும் ஆகிய இவ்விரண்டும் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நல்ல வழியாகும்.

ஆன்ற குடி-உயர்ந்த குடி; நல்ல வழியாகும். 992


3.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உறுப்புக்களில் ஒத்திருத்தல் மட்டும் மக்கள் எனப்படுதற்குரிய ஒப்புமையாகாது. செறியத் தக்க மக்கட்பண்பால் ஒத்திருப்பதே பொருத்தமான ஒப்புமையாம்.

உறுப்பு ஒத்தல்-அவயவங்கள் மட்டும் ஒத்திருத்தல்; வெறுத்தக்க- செறியத் தக்க (செறிவு-நெருக்கம்)

உறுப்புக்களால் நன்மக்களுக்கு ஒப்பாக இருத்தல் ஒப்புமையாகாது. பண்பால் இவர்கட்கு ஒப்புமையுடையவராக இருத்தலே சிறந்த ஒப்புமையாகும் என்றும் பொருள் கூறலாம். 993