பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடி செயல் வகை

279



3.குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

'என் குடும்பத்தை உயரச் செய்வேன்’ என்று கூறி, அதற்காக முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் தன் ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு உதவி புரிய முன் வந்து நிற்கும்.

செ்வல்-செய்வேன்;: தெய்வம்-இச்சொல் இங்கே ஊழ்வினையைக் குறிக்க வந்தது. மடிதற்றுதல்-தொழில் புரிவார் தம் ஆடையை இறுகக் கட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் குறிக்கும். தெய்வம் அல்லது ஊழ்வினை மடி தற்றுதலாவது, ஒருவன் செய்யும் முயற்சியை அவன் ஊழ்வினை மிகவும் எளிய தன்மையில் நிறைவேற்றி வைக்கும் என்பதாம்; முந்துறுத்தல்-முன் வந்து நிற்றல். 1023

4.சூழாமல் தானே முடிவெய்தும் தன்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

தம் குடும்பம் உயர்வதற்கான செயலை விரைந்து செய்ய முயல்வார்க்கு அவர் எண்ணிப் பார்ப்பதற்குள் அச்செயல் தானே நிறைவேறும்.

சூழ்தல்-எண்ணிப் பார்த்தல்; முடிவெய்தல்-நிறைவேறுதல்; தாழாது -தாமதம் செய்யாமல், அஃதாவது விரைந்து; உஞற்றுதல்- முயலுதல். 1024

5.குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

குற்றமற்றவராக இருந்து தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வாழும் ஒருவனை உலகத்தார் வலிய வந்து சுற்றத்தார் போன்று சூழ்ந்து கொண்டிருப்பர்.

குற்றம் இலன்-உள்ளத்தாலும் உடலாலும் எத்தகைய குற்றமும் செய்யாதவன்; குடிசெய்தல்-குடும்பத்தை உயர்த்துதல்;: சுற்றமா- உறவினர் போன்று; சுற்றும்-சூழ்ந்து கொண்டு இருப்பர்; உலகு- உலகத்தவர்.

உலகத்தார் அனைவரும் சுற்றத்தார் போன்று அவனைச் சூழ்ந்திருந்தால், அவன் குடும்ப உயர்ச்சிக்கு அவன் செய்ய முயலும் எதுவும் மிகவும் எளிதில் முடியும் என்பது கருத்து. 1025