பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

திருக்குறள்



6.நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அவன் தான் பிறந்த குடும்பத்தை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதே ஆகும்.

நல் ஆண்மை-நல்ல ஆண்மைத் தன்மை, ஆளுந் தன்மை; இல்லாமை-இல்லாததை அல்லது குடும்பத்தை ஆளும் தன்மை; ஆக்கிக் கொள்ளல்-ஆளுதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளுதல். 1026

7.அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

போர்க்களத்திலே போர்பு ரியும் வீரர் பலருள்ளே தலைமை தாங்கிப் போரை நடத்தும் பொறுப்பு எதற்கும் அஞ்சாத சிறந்த போர் வீரருக்கே அமைவது போலக் குடும்பத்தில் உள்ள சுற்றத்தார் பலருள்ளும் அந்தக் குடும்ப பாரத்தைத் தாங்கி நடத்தும் பொறுப்பு வாய்ந்தவர் மீதே குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

அமரகம்-போர்க்களம்; வன் கண்ணர்-அஞ்சா நெஞ்சர்; தமர்- சுற்றத்தார்; தமரகம்-குடும்பம்; ஆற்றுவார்-ஆற்றல் வாய்ந்தவர், வல்லமை மிகுந்தவர்; மேற்று-மேலது ஆகும்; பொறை-குடும்ப பாரத்தைத் தாங்குதல். 1027

8.குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.

தம் குடும்பத்தை உயர்த்துவதற்கான செயலைப் புரிய எண்ணுவோருக்கு அச்செயலைச் செய்வதற்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை. 'இதற்கு ஏற்ற காலம் வரட்டும்' என்று சொல்லிக் கொண்டு அவர் சோம்பலை மேற்கொண்டு தமக்குள்ள பெருமையையும் எண்ணிப் பார்த்துக் கொண்டு இருப்பாரானால், அந்தக் குடும்பமே கெட்டு விடும்.

குடி செய்வார்-குடும்பத்தை உயர்த்த எண்ணுபவர்; பருவம்-காலம்; மடி-சோம்பல்; மானம்-பெருமை; இது இங்கே வீண் பெருமை, படாடோபம், கர்வம் முதலியவற்றுள் ஒன்றைக் குறிக்கும். 1028