பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரவு

289



5.கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

சிறிதும் ஒளிக்காமல் உதவுபவர் உலகத்தில் சிலரேனும் உள்ளனர். ஆதலால், ஒருவர் முன் நின்று இரந்து கேட்டலை இரப்பார் மேற்கொள்கின்றனர்: வேறு காரணம் இல்லை.

கரப்பிலார்-ஒளிக்காமல் கொடுப்பவர்; வையகம்-உலகம்; உண்மையான்-உள்ளத்தாலேயே; கண் நின்று-கண்ணுக்கும் தெரியும்படி நின்று. 1055

6.கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

தம்மிடம் உள்ளதை ஒளித்துக் கூறும் குற்றம் இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒருங்கே ஒழிந்து போகும்.

கரப்பு-ஒளித்து வைக்கும் குணம்; இடும்பை-துன்பம், குற்றம், நோய்; ஒருங்கு-ஒருசேர; கெடும்-ஒழியும். 1056

7.இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

தம்மை அவமதித்து இழிவுரை கூறாது பொருள் தருபவரைக் கண்டால் இரப்பவருடைய மனம் மகிழ்ச்சி அடைந்து உள்ளுக்குள்ளே இன்புறும் தன்மை உடையதாகும்.

இகழ்தல்.அவமதித்தல்; எள்ளுதல்-இகழ்ந்துரைத்தல், இகழ்ந்து நகைத்தல்; உள்ளுள்-மனத்துக்குள்; உடைத்து-உடையதாக இருக்கும் தன்மையுடையது. 1057

8.இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரந்து கேட்கும் தன்மை வாய்ந்தவரைப் பெற்றில்லாது இருக்குமானால் இவ்வுலகத்தில் உள்ள மக்கள், உயிரற்ற மரப்பாவை சென்றும் வந்தும் இயங்கிக் கொண்டிருந்தால், எவ்விதம் இருக்குமோ அவ்விதம் சிறிதும் உணர்ச்சியற்றவராகக் காணப்படுவர்.