பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

திருக்குறள்



இல்லாயின்-இல்லாமல் இருந்தால்; ஈர்ங்கண்-குளிர்ச்சி வாய்ந்த இடம், செழிப்பு மிக்க இடம்; மா-பெரிய; ஞாலம்-பூமி அல்லது பூமியில் உள்ள மக்கள்; மரப்பாவை-மரத்தால் செய்யப் பெற்ற பதுமை; சென்று வந்து அற்று-செல்வதும் வருவதும் போலும் இருக்கும் அத்தகையது. 1058

9.ஈயார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

ஒரு பொருளை விரும்பி இரந்து கேட்டு அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாத போது, பொருள் தருவோரிடம் என்ன புகழ் உண்டாகும்? இல்லை என்ப்து பொருள்.

ஈவார்கண்-கொடுப்போரிடம்; தோற்றம்-புகழ்; முகத்தில் தோன்றும் உள்ள மகிழ்வின் பொலிவு; இரந்து கோள்-இரந்து பெற்றுக் கொள்ளுதல்; மேவார்-மேவுவார், விரும்புவார்; இலா அக்கடை-இல்லாத போது.

இரப்பவர் இல்லையென்றால் வள்ளல்களும் இல்லாமலே போய் விடுவார் என்பது கருத்து. 1059

10.இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

இரந்துண்டு வாழ்பவன், தனக்குத் தாராதவரிடம் கோபங் கொள்ளுவதற்கு அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டச் சான்றாக அமையும்.

வெகுளுதல்-சினத்தல்; நிரப்பு இடும்பை-வறுமைத் துன்பம்; சாலும்-அமையும்; கரி-சான்று, சாட்சி. 1060

107. இரவச்சம்


1.கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

தம்மிடம் உள்ளதை ஒளிக்காமல் மனமகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தவரிடத்திலும் ஒரு பொருளை இரக்காமல் இருப்பது அந்தப் பொருளைக் காட்டிலும் கோடி மடங்கு நல்லது.