பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரவச்சம்

291



உவந்து-உளமகிழ்ந்துl கண் அன்னார் ண் போன்று சிறந்தவர்; கோடி உறும்-கேட்டுப் பெற்ற பொருளைக் காட்டிலும் கோடி மடங்கு நல்லதாகும். 1061

2.இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

இவ்வுலகத்தைப் படைத்தவன், அதில் உள்ளவர்கள் பிச்சையெடுத்தும் உயிர் வாழ்தல் வேண்டும் என்று ஏற்படுத்தியிருப்பானானால், அந்தக் கொடியோனும் இரப்பவரைப் போல எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.

'இது என் தலைவிதி’ என்று சோம்பியிருந்து பிச்சையெடு்த்து வாழ விரும்புவதைக் கண்டிக்கும் முகத்தான் வள்ளுவர் இவ்விதம் கூறியிருக்கின்றார்.

பரந்து-எங்கும் அலைந்து திரிந்து; கெடுக-அழிந்து போவானாக; உலக இயற்றியான்-உலகைப் படைத்த முதல்வன். 1062

3.இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.

வறுமைத் துன்பத்தைப் பிச்சை யெடுப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று எண்ணி, முயற்சியைக் கைவிடும் வன்மையைப் போன்ற வன்மையுடையது வேறொன்றுமில்லை.

இன்மை இடும்பை-வறுமைத் துன்பம்; இரந்து தீர்வாம்-பிச்சையெடுத்து ஒழிப்போம்; வன்பாடு-முரட்டுத் தன்மை. 1063

4.இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

வாழ்வதற்கே வழி இல்லாத போதும் பிச்சையெடுத்து, உயிர் வாழ உடன் படாத மன அமைதி, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையுடையதாகும்.

இடம்-அகன்ற உலகம்; தகைத்து-மதிப்புடையது, பெருமையுடையது; இடமில்லாக்காலும்-வழி இல்லாத போதும்; ஒல்லா-இசையாத, உடன்படாத; சால்பு. மன அமைதி. 1064