பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்ந்நன்றி அறிதல்

27


2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒருவனுக்கு மிகவும் அவசியமான காலத்தில் பிறனொருவன் செய்த உதவியானது சிறியதாக இருந்தாலும் அவன் உதவி செய்த நேரத்தை நோக்கும் போது அச்சிறிய உதவி உலகத்தினும் மிகவும் பெரியது ஆகும்.

காலம்-(ஒருவனுக்கு மிகவும் இன்றியமையாத) சமயம்; ஞாலம்-பூமி; மாணப் பெரிது-மிகவும் பெரியது. 102

3.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

இதைச் செய்தால் இன்ன பயன் நமக்குக் கிடைக்கும் என்ற பயனை ஆராய்ந்து பார்க்காமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், அவ்வுதவியினால், வரும் நன்மை கடலை விடப் பெரியது ஆகும்.

தூக்குதல்-ஆராய்ந்து பார்த்தல்; நயன்-நன்மை. 103

4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவன் தமக்குத் தினை அரிசி போன்ற மிகச் சிறிய அளவுள்ள நன்மையைச் செய்தான் எனினும் அந்த நன்மையினால் விளையத் தக்க பயனை அறிந்து கொள்ளத் தக்கவர் அதனைப் பனம் பழம் போன்ற பெரிய அளவுள்ள உதவியாகக் கொண்டு அவனைப் பெருமைப்படுத்துவர்.

தினை-தினை அரிசி; தினை, பனை - சிறுமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள்; துணை-அளவு. 104

5.உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவர் மற்றவருக்குச் செய்யும் உதவியை அவ்வுதவியின் அளவாகக் கருதுதல் கூடாது. அவ்வுதவியைப் பெற்றுக் கொண்டவருடைய தகுதியின் அளவையே அவ்வுதவியின் அளவாகக் கருதுதல் வேண்டும்.

வரைத்து-அளவுடையது; சால்பு- தகுதி, குணம். 105