பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடுவு நிலைமை

31


நடுவு நிலைமையிலே இருந்து நீதி நெறியிலே நிலைத்து நிற்பவனுக்கு, அதனால் கேடு வருவதாக இருந்தாலும் அந்தக் கெடுதலை உலகத்திலுள்ள பெரியோர்கள் கேடாகக் கொள்ள மாட்டார்கள். 117

8.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

துலாக்கோல் முதலில் தான் சமமாக இருந்து, பிறகு தன்னிடம் வைத்த பொருளின் எடையினைச் சமமாக அளந்து காட்டும். அது போல நடுவு நிலையைக் கடைப்பிடித்து ஒரு பக்கமாகச் சாயாமல் இருத்தல் அறிஞர்களுக்கு அழகாகும்.

சமன் செய்து-சமமாக இருந்து; சீர்தூக்கும்-அளவினைச் சரியாகக் காட்டும்; கோல்-துலாக்கோல், தராசு; ஒருபால் கோடாமை-ஒரு பக்கமாக இல்லாதிருத்தல். 118

9.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

நடுவு நிலைமையாவது சொல்லில் குற்றமில்லாமலிருப்பது. ஒருவரது உள்ளம் நடுவு நிலைமையில் உறுதியாக இருக்குமானால் சொல்லில் குற்றமில்லாத நடுவுநிலைமை ஏற்படும்.

சொற் கோட்டம்-சொல்லால் விளையும் குற்றம்; செப்பம்- நடுவு நிலைமை; ஒரு தலையா-உறுதியாக; உட்கோட்டம் இன்மை - மனத்தில் குற்றம் இல்லாமல் இருக்கும் தன்மை. இங்கே நடுவு நிலைமையைக் குறிக்கும். 119

10.வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

வாணிகம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தம் பொருளைப் போலக் காப்பாற்றி வாணிகஞ் செய்வார்களேயானால், அவர்களுக்கு அதுவே சிறந்த வாணிகம் ஆகும்.

பிறவும் தம்போல்-பிறர் பொருளையும் தம் பொருளைப் போல். 120