பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

திருக்குறள்


13. அடக்கமுடைமை


1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் என்னும் குணம் ஒருவரைத் தேவர்களுள் ஒருவராகச் சேர்க்கும்; அடங்காமல் இருக்கும் குணம் ஒருவரை இருள் சூழ்ந்த இடத்தின் கண் கொண்டு போய்ச் சேர்க்கும்.

அடக்கம்-மனம், மொழி, உடல் முதலியவைகளால் அடங்கி இருத்தல்; ஆர் இருள்-இருள் நிறைந்த இடம், துன்பம் நிறைந்த இடம்; நரக லோகம் என்றும் கூறுவர்; உய்க்கும்-செலுத்தும். 121

2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு.

அடக்கம் என்னும் குணத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அந்த அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் உயிருக்கு வேறொன்றும் இல்லை.

பொருள்-உறுதிப் பொருள்,அழியாத பொருள்; ஆக்கம்-செல்வம்; அதனின் ஊஉங்கு-அதைக் காட்டிலும். 122

3.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

அடக்கம் உடைமையே அறிவுடைமை என்று ஒருவன் நல்ல வழியில் அடங்கி நடப்பானானால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு, அவனுக்குச் சிறப்பைத் தரும். 123

4.நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இல்லற நெறியிலிருந்து மாறுபடாது அடங்கி நடப்போனுடைய உயர்ச்சி, மலையின் உயர்ச்சியிலும் மிகவும் பெரியதாகும்.

திரியாது அடங்குதல்-ஐம்பொறிகளும் நல்ல நிலையில் இருக்கத்தான் அவைகளின் வழியே தன் மனத்தைச் செலுத்திக் கேடு அடையாமல் அடங்கி இருத்தல்; தோற்றம்-உயர்வு; மாண-மிகவும். 124