பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடா ஒழுக்கம்

71


28. கூடா ஒழுக்கம்


1.வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சகம் பொருந்திய மனம் உடையவனது பொய்யொழுக்கத்தைக் கண்டு, அவனுடைய உடம்பில் கலந்து நிற்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே சிரித்துக் கொள்ளும்.

வஞ்சம்-கபடம், பொய்; படிற்றொழுக்கம் - பொய்யான ஒழுக்கம்; பூதங்கள் ஐந்தாவன : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். நகும் -சிரித்துக் கொள்ளும். 271

2.வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

குற்றமெனத் தன் நெஞ்சு அறிந்த ஒரு செயலை ஒருவன் செய்வானேயானால், அவனுக்கு ஆகாயத்தை அளாவிய தோற்றம் அமைந்திருந்தாலும், அதனால் என்ன பயன்? சிறிதும் இல்லை. 272

3.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் மன வலிமை இல்லாத ஒருவன், தவ வேடமாகிய வலிமை பொருந்திய உருவத்தைத் தாங்கி நிற்பது, வலிமையில்லாத பசுவானது வலிமையுடைய புலித் தோலைப் போர்த்து கொண்டு, பயிரை மேய்தலுக்குச் சமமாகும்.

வலியில் நிலைமை-மனவலியற்ற நிலை; வல்லுருவம்- காண்போர் அஞ்சத் தக்க உருவம், இங்கே தவ வேடம்; பெற்றம் - பசு. 273

4. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தீய எண்ணங்களையுடைய ஒருவன் தவக் கோலத்தில் மறைந்து நின்று தவ ஒழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்வது, வேடன் ஒருவன் ஒரு புதரிலே மறைந்து நின்று பறவைகளைப் பிடித்தலுக்குச் சமம் ஆகும். 274