பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

திருக்குறள் கட்டுரைகள்


வெறுக்கிறாள்? எதற்காக வெறுக்கிறாள்? இவற்றை வள்ளுவர் வாக்கினாலேயே கேளுங்கள்:

“ஐயோ, நான் பெற்ற மகன் குடிகாரன் ஆனானே. அவன் அறிவிழந்து போனானே. அவனை எவரும் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்களே, குடும்பத்தின் புகழும் பெருமையும் அவனால் அழிந்து போகுமே.”

“ஐயோ, கள் குடிக்குந் தீயபழக்கம் விலங்குகளிடத்துங்கூட இல்லையே. இவன் குடிக்கப் பழகிக் கொண்டானே, அறிவாளிகள் இவனை விலங்குகளோடு கூட ஒன்றாக வைத்து எண்ண மாட்டார்களே.”

“ஐயோ, மானம் என்னும் ஒரு உயர்ந்த செல்வம் இவனைவிட்டு நீங்கிவிடுமே. இனி என் மகன் கள்ளருந்தி, மானத்தை இழந்து, உயிர்ப்பிணமாகத்தான் நடந்து திரிவானா?”

“ஐயோ. இத் தீய பொருளையும் விலையைத் கொடுத்தா வாங்கி உண்டு திரியவேண்டும்? இவனுடைய அறியாமையை நான் என்னவென்று கூறுவது?”

“ஐயோ உறங்குகின்றவரும் செத்துப்போனவரும் அறிவை இழந்திருத்தவினாலே ஒன்றுபடுதல்போல, கள்ளுண்டவரும் நஞ்சுண்டவரும் அறிவிழத்தவினாலே ஒன்றுபடுகிறார்களே. “கள்” என்று எண்ணி, என் மகன் நஞ்சை உண்ணுகிறானே.”

“ஐயோ, ஊராரெல்லாராலும் என் மகன் நகைக்கப் படுகிறானே. அவன் குடித்து வந்தும், “குடிக்கவில்லை அம்மா” என என்னிடத்துங்கூட உளறி உளறிப் பொய் கூறுகிறானே. அவனைப் பெற்ற என் வயிறு பற்றி எரிகிறதே, நான் என்ன செய்வேன்?”

எப்படித் தாயின் உள்ளத்துடிப்பு? இப்பொழுது தெரிகிறதா, அவள் தன் குடிகாரப் பிள்ளையை அடியோடு வெறுப்பதன் காரணம்?