பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
111


பேசும்போது வகுப்பறை என்று விரிவுரை நிகழ்த்தக் கூடாது; தொகுத்துக் கூற வேண்டும். வெறுக்கத்தக்க செய்திகளைத் தவிர்க்க வேண்டும்; மாற்றரசனை மகிழ வைக்கும்படி சிரிக்க வைத்துப் பேசித் தன் அரசனுக்குச் சீர்மைகளைத் தேடித் தரவேண்டும்.

நூல்கள் பல கற்று அவற்றைச் சான்றாக எடுத்துக் கூறும் புத்திசாதுரியம் தேவைப்படும்; அரச அவையைக் கண்டு அஞ்சக் கூடாது; மாற்று அரசன் என்ன செய்வானோ என்ற அச்சம் இருக்கக் கூடாது.

அங்கே சில விதிமுறைகள் இருக்கலாம்; எப்படிப் பேசுவது? யாரிடம் சொல்லி அனுப்புவது? எப்பொழுது பேசுவது? என்பன போன்ற விதிமுறைகள் இருக்கலாம். அவற்றை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்; கண்டபடி கண்ட நேரத்தில் பேசக்கூடாது; அங்கு வந்து இருப்பவர்கள் யார் யார்? அந்தச் சூழ்நிலையில் இதைப் பேசலாமா என்பது எல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும். அவ் வரசன் மனநிலை எத்தகையது என்பதையும் அறிந்து அவன் ஏற்றுக்கொள்ளத்தக்க சூழ்நிலையில் பேச வேண்டும். காலம், இடம் அறிந்து பேசும் திறமை வேண்டும்; எதனைப் பேச வேண்டுமோ அதனை முன் கூட்டி எண்ணிப் பார்த்தபின்னரே பேசவேண்டும்.

சொந்த நலன் எதுவும் தனக்கு இருக்கக் கூடாது; மாற்றரசன் தன்னை விலைக்கு வாங்கத் தான் இடம் தரக்கூடாது; இதனைச் செயல்துய்மை என்று கூறலாம். தன் கருத்துக்கு அரசனின் அமைச்சர் துணையாகக் கூடிய அளவில் அவர்களையும் தழுவிக்கொண்டு பேசுவது தேவை; அதே சமயத்தில் பகைவர் மருட்டலுக்கு அஞ்சாமல் துணிந்து எடுத்துக் கூறவேண்டும்.