பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



36

திருக்குறள் புதைபொருள்

என்று இக் குறள் நம்மை எண்ணிப் பார்க்கும்படி தூண்டிக் கொண்டிருக்கிறது.

உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் விளக்கும் முறையும் அவர் கையாண்ட உவமையும் மிகமிக உயர்வானதாகும். இதுபோன்றதொரு கருத்தை உலகின் எப்பகுதியிலும், எம்மொழியிலும், எப்புலவனும் இன்றைக்கும் கூறவில்லை என்பதை எண்ணும்பொழுது தமது உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது.

தம்பி! நீ ஒன்று அல்ல; மூன்று உடல் ஒன்று, உயிரி இரண்டு; நீ மூன்று. பறவை ஒன்று, கூடு இரண்டு; பார்க்கின்ற நீ மூன்று. உடலும் உயிரும் உள்ளவரையில்தான் நீயும் இருப்பாய்; அவை இரண்டும் உனக்குக் கட்டுப்பட்டது மல்ல; அதன் நட்பும் நீடித்ததல்ல. ஆதலின் உனது நிலையும் நீடித்ததல்ல. ஆகவே, அதற்குள் நீ நல்லதை எண்ணு! நல்லதைச் சொல்! நல்லதைச் செய்! இவைகளைச் செய்ய உன்னால் இயலாது என்று தோன்றினால், தீமையையேனும் எண்ணாதே! சொல்லாதே! செய்யாதே! இது உன்னால் முடியும்! முடியக்கூடிய எதையும் உடனே செய்! காலந்தாழ்த்தாதே! ஏனெனில்,

        குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
        உடம்பொடு உயிரிடை நட்பு.

குறளை எடு! படி! எண்ணு! உணர்! செய்! அது உன் நல்வாழ்வுக்கு ஏற்ற வழியைக் காட்டும் ஒரு கைகாட்டி!

வளரட்டும் தமிழர் நெறி!