பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. கொன்றதுபோலும் நிரப்பு

       "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
        கொன்றது போலும் நிரப்பு."

என்பது திருக்குறளில் ஒரு குறள்.

“நேற்று வந்து என்னைக் கொன்றது போன்ற வறுமைத் துன்பம் இன்றும் வருமோ?” என்பது இதன் பொருள். இது “நல்குரவு” என்ற தலைப்பில் வந்த ஒன்று.

104, 105, 106 அதிகாரங்கள் என, ‘உழவு’ ‘நல்குரவு’ ‘இரவு’ என்பன அமைந்து, சங்கிலித் தொடர்போன்று ஒன்றை ஒன்று பற்றிநின்று ஒர் உண்மையை விளக்கிக் கொண்டிருக்கின்றன. அது ‘உழவுத்தொழிலே தலை சிறந்தது. இன்றேல் வறுமை வரும். வந்தால் இரந்துண்ண நேரிடும்’ என்பதே.

நல்குரவு என்பது வறுமை. வடமொழியாளர் இதனைத் ‘தரித்திரம்’ என்பர். வள்ளுவர் இதனை இன்மை, இடும்பை, நிரப்பு என்ற சொற்களாற் காட்டுகிறார். வறுமை அடைந்த மக்களை ‘நல்கூர்ந்தார்’ ‘துப்புரவு இல்லார்’ எனக் குறிப்பிடுகிறார்.