பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

௩௫


தொடுக்கும் - அஃதாவது இருள் தீர எண்ணித் தேர்ந்து முற்படுத்தும் ஒள்ளழகு - அவரின் தெள்ளிமையையே நமக்குத் தெளிவுறத் தெரிவிக்கின்றது! (காண்க: (5 இருள்சேர் இருவினை-மறவினை தீவினை பொருள்: அறியாமை சேர்ந்த அறத்திற்கு எதிரான மறவினை; நன்மைக்கு எதிரான தீவினை ஆகிய இரு வினைகள்) , தெளிந்ததும் உரியதுமான நேர்ப்பொருள் கூறுகை - இவ்வுரைச் சுருக்கத்தில் அமைந்துள்ள சீரிய செந்நிலையாகும்!

"புகழ் புரிதல்" (59) என்பதற்கு அனைவரும் "புகழை விரும்புதல்” என்றவாறே பொருள் சுட்டி நிற்க - அப் புரிதல்" என்பது "விருப்பமாகச் செய்தல்” என்றவாறான அடிப்படையில் வளர்ந்து - "செய்தல்” என்றவாறும் பொருள் விரிவாக்கம் பெற்று நெடுகலும் வழக்கிலிருந்து வந்தமையைப் பொருட்பாடறிந்து கண்டு, - “புகழ் புரிதலாவது: புகழுக்குரிய செயலைச் செய்தல்” என்றவாறு இவ்வுரைச் சுருக்கத்தினிடையிற் சுட்டப்பெற்றறுள்ளமை பொருள்தெளிவு சான்றதாகும்!

மணிவிளக்கவுரை வரைந்த அப்பாத்துரையார் . அதனுள் ஓரிடத்து, "அறம்" என்பதற்கு இந்தியாவுக்கு வெளியே சரியான சொல் கிடையாது என்றவாறு குறித்துச் சென்றார். அதற்கு - "இந்தியாவுக்கு வெளியே என்பதினும் தமிழியலுக்குவெளியே என்பதே சரியாக முடியும்” . என்றவாறு, நம் பாவலரேறு ஐயா அவர்கள் வரலாறுணர்ந்த வீற்றொடு மாறுகூறும் அழகு சுவைக்கத் தக்கது! இத்தகு தமிழ்மானஞ் செறிந்த வெளிப்பாடுகள் இவ்வுரைச் சுருக்கத்துள் பேராளமான பதிவுகள் கொண்டுள்ளன!

இவருரைக்கும் முன்னர், எண் குணத்தான்' சிக்கலுக்குரியவனாகவும் மதச்சேற்றில் சிக்கலுற்றவனாகவும் இருந்தான்! உரையாசிரியர்கள் பலரும் தாம்தாம் சார்ந்திருந்த மதங்கள் விரித்தார்க்கும் எட்டெட்டுக் குணங்களையும் எண் குணத்தானுக்கெனப் பட்டியலிட்டனா! இதற்குப் பரிமேலழகப் பார்ப்பனரும் விலக்கினாரல்லர்! பைந்தமிழ்ப் பாவாணரும் விலக்கினாரல்லர்! பலரும் இவ் எண் குண்த்தைச் சிவனிய மதத்துக்கும் சமணமதத்துக்குமாக முடிச்சுப் போட்டு மூச்சுமுட்டினர். நம் பாவலரேறு ஐயா அவர்கள், அனைத்துச் சிக்கலும் அடியோடறுமாறு - "எண் குணத்தான் (எல்லா நிலை மக்களும் ஏற்றத் தாழ்வின்றி அணுகுதற்கு உகந்த எளிமையான குணத்தினை உடைய அறவாணன்” என்றவாறு பொருளுரைத்திருக்கும் எண்மையொண்மை, நனி சிறந்த தெண்மை தேர்ந்தது!