பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


வெவ்வேறு புள்ளிகளைச் சூழ்ந்து உருவான வெவ்வேறு உருவங்கள் புறப்பட்டன. ஒன்று - கோசலை அம்மாள்; இரண்டு - வாணி, மூன்று..?

“வினாக்குறியை வேலியெனக் கொண்டுள்ள அந்த மூன்றாம் உருவம் யாருடையது?...கதையை வெளியிடக் கோரிக் கடிதம் விடுத்தாளே, அந்தப் பெண்ணா?... இல்லை?...இல்லை யென்றால் வேறு என்ன?...அம்மா சென்ற வருஷம் கேட்டாற் போல நான் யாரையாவது காதலிக்கிறேனா? காதலித்திருக்கிறேனா? ... மனிதனாகப் பிறந்த பாவத்துக்கு யாரையாவது ஒரு தடவை காதலித்துத்தான் தீர வேண்டுமா? காதலித்தால் மட்டும் போதுமா? காதல் எனும் ஒன்று இளமைப் பருவத்துக்கு ஓர் இலட்சியக் கோட்டையாக அமையக்கூடும். ஆனால் அந்தச் சிற்றின்ப நுண்ணுணர்வுதான் வாழ்க்கை எனும் அரண்மனைக்குக் கோட்டை வாசல் எனக் கொள்ளலாமா? கூடாது. கூடவே கூடாது...!...காதல் என்னும் அழியும் உணர்வின் ஆசையைவிட, அழியாத புகல்வழி ஏறி நின்று ஒளி காட்டும் அந்த உண்மை வடிவமான பேரின்பப் பேருண்மையல்லவா முக்கியமான பண்பாகும்!...

‘இப்படிப்பட்ட உயிர்நிலைக் குறிப்புகளை நான் எண்ணிக் கணக்கிட்டுப் பார்ப்பது நல்லதா? என்வரை நல்லதுதானா?.. நல்லதுதான், பேஷாக நல்லதுதான்! ‘வாழ் நாளிலே ஒரு தரமேனும் காதலித்துப் பழக்கப் படாதவன் பைத்தியக்காரன்!’ என்று யாரோ ஒருவன் சொன்னதற்கும், ‘காதலிக்க நேரம் இல்லை’ என்பதாக வேறு எவனோ ஒருவன் உரைத்ததற்கும் இடைப்பட்ட தொலைவிலே நின்று-நிதானித்து-நிர்ணயப்படுத்திச் சிந்தித்துப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நான், காதலை ஒரு