பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 37


வெடித்த சிரிப்புடன், தான் அரைகுறையாக விட்டிருந்த காகிதங்களை எடுத்து வைத்துக் கொண்டு பேனாவை எடுத்தார். போதை கொண்டவரென, எழுத்துக்களை அள்ளி அள்ளி வீசினார்.

"...அந்தப் பெண் என்ன பதில் சொல்லப் போகிறாளோ வென்று காத்திருந்தான் அந்த இளைஞன். அதற்குள் அவளுக்கு 'டெலிபோன் கால்' ஒன்று வரவே, அவசரமாக விரைந்து சென்று பேசினாள். ஆமாங்க அப்பா! நான் இவரைத்தான் லவ் பண்ணுறேன். என் முடிவு இதுதானுங்க!' என்றாள்!.

கதைக்கு நல்ல முடிவு கிட்டி விட்டதில் ஞான சீலனுக்குப் பரம திருப்தி கிட்டியது!..

6. "நீ என்னைக்
காதலிக்கிறாயா?..."

ராஜோபசாரம் நடந்து கொண்டிருந்தது.

ஒற்றைக் காலில் நின்று எல்லாவற்றையும் கவனித்தாள் கோசலை அம்மாள்.

பெரிய மனிதர், அந்நியர் வீட்டில் சாப்பிடுகிறோம் என்பதை அடிக்கொரு முறை நினைவுபடுத்திக் காட்டினார். ஞானசீலன் நல்ல பதில் சொல்லிவிட்டால் போதும் என்ற தயவு உணர்ச்சியில் அவர் மனம் தவித்தது.

ஞான சீலன் வெகு உரிமையுடன் அவரைக் கவனித்தார். சர்க்கரைப் பண்டம் அதிகம் புசிக்கக் கூடாதென்று சொல்லியும் கேட்காமல், அவர் இலையில்