‘வாழ்வாவது மாயம்’ என்றார்கள் சித்தர்கள். ‘மண்ணாவது திண்ணம்’ என்றும் உறுதி பூண்டார்கள் அவர்கள். ஆதலால்தான், உடலையும் மாயையெனக் கொள்ளத் தலைப்பட்டார்கள். இவ் வரிசையில் பெண்ணையும் சேர்த்துக் கொண்டார்கள். இவர்கள் கண் கட்டு வித்தைக்காரர்கள்!
வாழ்க்கையை வாழ்க்கையாகக் கணிக்கவும் காணவும், பண்பான - பரந்த மனம் வேண்டும். இத்தகைய மனப் பக்குவம் வாய்க்கப் பெற்றால், பெண்ணைப் புதிர் எனவும், பெண்ணை மாயை எனவும் பேச மாட்டோம்!
பெண் எனும் பிறவி புனிதப் பூ!
அவளுக்கு ஒரு பிறவி, ஆனால் பல அவதாரங்கள்!
அவளுக்கு உயிர் ஒன்று; உயிர்ப்புகள் பல உண்டு!
பெண் மனத்தைச் சொல்லிக் காட்டாத பேனாக்கள் இல்லை.
ஆனால், நான் அறிமுகப்படுத்தப் போகிறவள் பொற்புடைப் பூவை.
அந்தப் பெண்ணைக் கையெடுத்துக் கும்பிடுகின்றேன் நான்.
என்னுடைய தனித் தன்மையை நீங்கள் உணர்வீர்கள்.
ஆகவே, இப் புதினத்தின் புத்தம் புதிய தத்துவ அழுத்தத்தையும் உங்களால் அனுமானம் செய்து கொள்ள முடியுமென்றும் நம்புகிறேன்.