பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. ரிஷி மூலம் - நதி மூலம்!

ழுதி முடித்த தாள்களை ஒன்றாக இணைத்துக் குண்டுசியால் தைத்துப் பக்க எண்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து முடித்து, மேஜை மீதிருந்த அழைக்கும் மணியை எழுப்பினார் ஞானசீலன். அந்த வாரத்துக்குரிய தம் கடமை முடிந்தது என்ற அளவில் அவரிடமிருந்து ஆறுதல் பெருமூச்சு புறப்பட்டது. தன் கடமைகள் ஓயாது என்று எடுத்துரைப்பவன் போல, ஆபீஸ் பையன் அறைக் கதவை இழுத்து மூடிக் கொண்டு ஓட்டமாக ஓடிவந்து நின்றான். “அண்ணா!” என்றான்.

ஞானசீலனின் சிந்தனை வசப்பட்ட முகம் திமிர்ந்தது. வாய் திறக்காமல், மேஜை மீதிருந்த கற்றைக் காகிதங்களை எடுத்து அந்தப் பையனிடம் நீட்டினார். “ஆனந்தனிடம் சொல்லி, இன்றைக்குச் சாயந்திரத்துக்குள் எல்லாம் கம்போஸ் ஆகி வர வேண்டுமென்று நினைப்பூட்டு, தம்பி!” என்று நினைவுக்குச் சிவப்புக் கோடு கிழித்துப் பேசினார் அவர்.

“சரிங்க” என்று தலையை உலுக்கிக் கொண்டே, அங்கிருந்து நகரத் தொடங்கினான் சிறுவன்.

“ராதா!” என்று கூப்பிட்டார் ஞானசீலன்.

“காப்பி வேணுங்களா?” என்று கேட்டான் ராதா.

ஞானசீலனுக்குச் சிரிப்புத் தாளவில்லை. “ஊம்... ஊம்... எனக்குக் காப்பி வேணுமிங்கிறதை மட்டும் குறிபார்த்து வச்ச மாதிரி கச்சிதமாச் சொல்லிப்பிடுறியே, தம்பி!” என்றார் அவர்.

“மணி நாலு ஆகப் போகுதுங்களே, அதுதான் கேட்டேன். உங்களுக்கு காப்பி டயமுன்னா, எனக்கும் அப்படித்தானுங்களே!”