6 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
சிரிக்காமல் சொல்வதற்கும் பக்குவம் வேண்டும். பையன் அந்த ரகம்!
சிரிக்காமல் கேட்பதற்கும் கெட்டிக்காரத்தனம் வேண்டும். துணை ஆசிரியர் இந்த வகை!
பையன் காப்பியும் கையுமாக வந்தான். வாடை வளர்ந்தது.
அதே வேளையில், மூத்தவர் ஒருவர் இளம் எழுத்தாளர் என்ற அறிமுகத்துடன் தம் படைப்பு ஒன்றை ஞானசீலன் கையில் ஒப்படைத்தார்.
ஞானசீலனுடைய பார்வையில் இரை தேடும் கழுகின் தீட்சண்யம் இருந்தது. நல்ல கதைகளைத் தேடுவதில் அவருக்கு மிகுந்த பற்றுதல் உண்டு. மேலோட்டமாகச் சென்ற அவரது திருஷ்டி, வந்தவரது சிருஷ்டியில் ஊர்ந்த போது, அவருடைய இதழ்க் கடையில் நமட்டுச் சிரிப்பு ஊர்ந்தது. 'மூன்று முரடர்களின் கையில் ஒரு கன்னி' என்று கதைக்குத் தலைப்பு சூட்டப்பட்டிருந்தது. "ஈஸ்வரா!" என்ற ஆயாசப் பெருமூச்சு அவரை அறிந்தே வெளிவந்தது. வந்தவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. காத்திருந்த காப்பியினைச் சுற்றி ஈ ஆடியது.
"ஸார்..."
"ஓ... நீங்கள்..."
"ஆமாங்க. என் பெயர் சிவக்கொழுந்து. என் கதையைப் பிரசுரம் செய்து ஆதரவு கொடுத்தால்தானுங்க என்னைப் போன்றவர்கள் கடைத்தேற முடியும். தயவு பண்ணி."
"தயவு பண்ணி ஒரு காரியம் செய்யுறீங்களா?"
"சொல்லுங்க ஸார்."