திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 7
"இந்தமாதிரிக் கதைகளைப் போடறதுக்கின்னு தமிழ் நாட்டிலே சில பத்திரிகைங்க இருக்கு. அங்கே போய்க் கொடுங்க!"
"இந்த ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியலிங்க. உங்களை ரொம்ப நம்பி வந்தேன். ஸார்!"
"மன்னிக்கணும்!"
"எனக்குப் பணம் எதுவும் வேண்டாம், ஸார்!"
"எதற்கு.?"
"என்னுடைய இந்தக் கதையைப் போடுவதற்கு."
"நல்ல மனிதர் ஐயா நீர்! புதுமைப்பித்தன் காலத்தில் எழுதியிருக்க வேண்டிய புள்ளி ஐயா நீர்!"
"நூற்றிலொரு வார்த்தை ஸார்!"
"ஊம்.”
"உங்க கதைங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலேஜிலே படிக்கிற என் ஸிஸ்டர் கூட உங்க கதைகளை விடாமல் படிக்கும் ஸார்!"
"அப்படியா? சந்தோஷம். இந்தாருங்கள் காப்பி!"
"எனக்குக் காப்பி வேண்டாங்க. என் கதை...."
"உங்க கதைதானே?... இந்தாருங்கள்...!"
நீர்த் தடாகத்தின் அடியிலிருந்து எம்பிக் குதித்து விளையாடும் கெண்டைமீன், மீண்டும் நீரடிக்கே திரும்பிச் செல்வதுபோல, அந்தக் கதை அதற்கு உரித்தானவரிடமே சரண் புகுந்தது.
மெல்லிய நகைப்புச் சத்தத்தை ஓசைப்படுத்தாமல் உண்டாக்கினான் பையன்.
ஞானசீலன் நெற்றிப் பொட்டில் கையைப் பதித்து அழுத்திக் கொண்டார். வந்தவர் தந்த கதையைப் படித்த தன் பலன் கைமேல் - அல்ல, தலை மேல் கிட்டியது.