பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 75


அவரது நாவல்களின் அச்சுப் படிகளைச் சரி பார்க்கப் பொழுது சரியாகிவிடும். ‘எல்லாம் முடியப் பத்து - பதினைந்து நாட்கள் போதுமா?...இதற்கிடையில்தான் நான் என் வாணிக்கும் பதில் சொல்ல வேணும். இல்லையா?...ம்!..’

வாணியின் பெயர் அவளுடைய எழிலை நினைவூட்டிற்று. அவளது எழில் அவளுக்குரிய பெண்மையின் மென்மையை நினைவூட்டியது; அந்தப் பெண்மையின் மென்மை அவருக்குகந்த கடமையின் நிறைவைச் சுட்டியது. அவரது கடமையின் நிறைவில் அவளது ஏழைமை, சுடச்சுடரும் பொன்னாக ஒளிர்ந்து பளிச்சிட, அவள் கோதண்டபாணி என்ற கோர்ட் அமீனாவின் மகளாக இருந்த உறவுடன் திருமதி ஞானசீலன் என்னும் புதிய உரிமையையும் ஒட்டிப் பிடித்துக் கொள்ள விருக்கின்ற வாழ்க்கை ஒப்பந்தத்தின் நிழல் அவரை மடக்கியது. மடங்கிய ஞாபகசக்தியில் வாணி சக்தியாய் நின்றாள்.

‘வாணி!..’

இந்தப் பெயர்ப் பஜனையுடன்தான் அவர் எட்டாம் நம்பர் பஸ் பிடித்து, பாம்பாட்டித் தெருவை அடைந்தாரோ?...

பாசமும் பாசமும் ஆரத் தழுவிக் கொண்டன.

“அம்மா!...”

“தம்பி”

“இப்ப உங்க உடம்பு பரவாயில்லிங்க மெட்டடோன் டானிக் பரவாயில்லைதானே?...”