பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


“ஆமா தம்பி. ஆனா, நீதான் கொஞ்சம் இளைச்சிருக்கிறாப்பிலே என் கண்ணுக்குத் தோணுது!”

“நீ என்ன அம்மா! இப்போ நான் நாலு ஐந்து பவுண்ட் கூடுதலாகவே இருக்கேன். உங்களுக்கு எம்மேலே இருக்கக் கூடிய பாசத்துக்கு நான் ஒரே மூச்சிலே ஒரு நூறு பவுண்ட் எடை கூடிவிட்டால்கூட, உன் தாய் மனம் திருப்தியடையாதே!.. இல்லியா அம்மா?” என்று சங்கோபாங்கமாக உரையொன்று நிகழ்த்திப் பெற்றவளைச் சமாதானப்படுத்த வேண்டியவரானார் அவர்.

அன்னைக்கு ஆறுதல் ஊட்டியதும், அவரது விழி நோக்கு வழி ஒன்றை இலக்குச் சுட்டிச் சுற்றியது. ‘வாணி எங்கே?’

சென்ற முறை வந்த தருணத்தில், வாய்த்திட்ட நல்லதிர்ஷ்டத்துக்கு நிகராக, அவர் அவளைச் சந்தித்த பாங்கையும் பாவனையையும் நினைவுக் குழியில் தேக்கினார். நிலைப்படி மறைவில் நினறு தம்மைப் பார்க்கவேண்டி, கள்ளவிழிப் பார்வையைத் தூது அனுப்ப, அதே சடுதியில் தானும் நேர் முகப் பார்வையைப் பதிலுக்கு அனுப்பிய விவரத்தையும் அவர் மறக்கவா வாணியின் நினைவில் இப்பொழுது மனம் சுற்றியலைகிறார்?...

கூப்பிடு தொலைவில், கூப்பிடாமல் ஓடிக் கொண்டிருந்த ‘பொங்கு விரி காவிரி’க்கு ஓடினார். அன்னை கொடுத்த காலைக் காப்பி தொண்டைக்குள் நின்றது. பாசம் தொண்டை நிரம்பியதாயிற்றே? மானம்புச் சாவடித் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு சோப்புப் பெட்டியுடன் படிக்கட்டில் இறங்கினார். புது வெள்ளம் வந்திருந்த புதிது அல்லவா? ஊழிக்கூத்துத் தெய்வத்தின் சித்தமாகக் காவிரி பொங்கியது.