78 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
“காப்பி...அம்மா தந்தாங்க”
“இல்லையே, காப்பியை இப்பொழுது நீயல்லவா தருகிறாய்?”
“நீங்கள் கதை எழுதுபவர்கள்...”
“நீயும் எழுதேன்!”
“தெரியாது.”
“தெரிய வேண்டாம். உன்னையும் அறியாமல் நீதான் கதை எழுதிக் காட்டுகிறாயே! அதைப் பார்த்துத்தானே நான் நகல் எடுக்கிறேன்!”
“என்ன சொல்கிறீர்கள்?”
“நீதான் கதை, அதாவது, நீதான் என் கதை; எனக்குக் கதை என்கிறேன். என் எழுத்துக் கடமையின் அர்த்தபுஷ்டியான பிம்பம் அல்லவா நீ? நீ இல்லையேல் நான் இல்லை!”
“எனக்குப் புரியமாட்டேன் என்கிறதே!...”
“போகப் போகப் புரியும்!”
“சரி. அப்பா உங்களைப் பார்க்க வந்து விடுவார்.”
“வரட்டுமே !”
“காப்பி...!”
“இதோ!”
“சாப்பிடுங்கள் என்றால்...”
“இதோ...சாப்பிட்டாச்சு என்றால்....
கள்ளச் சிரிப்பு அள்ள முடியாமல் வழிந்தது.
பூவையைப் பார்த்தவருக்குப் பூவின் நினைவு ரதம் ஏறி வந்தது. பூவைப் பூவைக்கு எப்படிக் கொடுப்பது? கன்னிப் பெண்ணுக்குக் கன்னி கழியுமுன்னே ஆடவன், என்னதான் உறவும் உரிமையும் நிர்ணயமாக்கப் பட்டாலும், கொடுப்பது உகந்த நாகரீகமாகுமா?’