பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 135



என்ன காரணத்தாலோ இரண்டாவது முறையாக இப்பாடலிலும் மகளிர் மயக்கத்தில் தம் மனம் செல்வதை அடிகளார் குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் சராசரி மனிதனின் மன நிலையை அடிகளார் ஏறட்டுக்கொண்டு பாடினார் என்று சொல்லமுடியவில்லை.

மிகுதியும் வளர்ச்சியடைந்த மனிதர்களின் மனங்கூட, பழைய பழக்க வசத்தால் ஒரோவழி இத்தகைய எண்ணங்களில் ஈடுபடுவதுண்டு என்று மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்தவர்கள், கூறுகின்றனர். (திருக்குறளில் துறவு என்ற அதிகாரத்தை அடுத்து, பின்னர் அவா அறுத்தல் என்ற அதிகாரம் வருதலின், இவற்றிடையே காணும் பொருத்த மின்மையை அறிந்த பரிமேலழகர் அவா அறுத்தல் அதிகாரத்திற்கு எழுதிய முன்னுரையைக் காணவும்) இத்தகைய எண்ணங்கள் பெரியோர்களிடையே ஒரோவழி, ஒரு கணம் தோன்றினால்கூட, அதை மிகைப்படுத்தி அக்குறையிலிருந்து நீங்கவேண்டும் என்று பாடுவது சரியானதே ஆகும். .

பெருங்குடியில் பிறந்து, ஒரு பேரரசின் அமைச்சராகவும் இருந்த ஒருவர், திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முன்னர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருத்தல் இயல்பேயாகும்.

இவற்றையெல்லாம் துறக்குமாறு செய்தது திருவடி தீட்சை என்றாலும், ஒரோவழிப் புலன்கள் மேற் செல்லும் இப்பற்று 'தேகப் பிரக்ஞை' இருக்கின்றவரை இருக்கத்தான் செய்யும். என்றோ ஒருகணம் மனத்துள் தோன்றிய இவ்வெண்ணத்தைப் பெரிதாக்கி, மிகைப்படுத்திக் கூறியதால் அடிகளாரின் பெருமை வெளிப்படுகிறதே தவிர, இதனால் இழுக்கொன்றும் அவருக்கு நேரவில்லை என்பதை அறிதல் வேண்டும்.