பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


108.

வளர்கின்ற நின் கருணைக் கையில்
         வாங்கவும் நீங்கி இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்
         வெண்மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோச
          மங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன
          தோற்றச் செழும் சுடரே 4

வாங்கவும்-வளைத்துப் பிடிக்கவும். மிளிர்கின்ற-விளங்குகின்ற.

‘ஐயனே! உய்யவேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிதும் இன்றி, உலக வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டு வழியோடு சென்றுகொண்டிருந்த என்னை, மேலும் மேலும் வளர்கின்ற கருணையாகிய நின் திருக்கரம் வளைத்துப் பிடித்தது.’

‘கருணையாகிய நீண்ட கரம் வளைத்தும்கூட, துரண்டிலில் சிக்காத மீன்போல், நின் பிடியில் அகப்படாமல் சுற்றிவருகின்ற என்னைத் தயைகூர்ந்து விட்டுவிடாதே’ என்றவாறாம்.

109.

செழிகின்ற தீப்புகு விட்டிலின்
சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்
வெறிவாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோச
மங்கைக்கு அரசே
வழி நின்று நின் அருள் ஆர்அமுது
ஊட்ட மறுத்தனனே 5

செழிகின்ற-வளர்கின்ற. சின்மொழியார்-சிலவாகிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள். வெறி-மனம். அறுகால்-வண்டு. ஊட்ட-உண்பிக்க.