பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


121.

பொருளே தமியேன் புகல் இடமே
      நின் புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய்
      மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில்
      உத்தரகோச மங்கைக்கு அரசே
இருளே வெளியே இக பரம்
      ஆகி இருந்தவனே 17

வெருள்-அச்சம். மெய்ம்மையார்-ஞானிகள். இருள்-தன்னடி கூடாத வன்கணாளர்க்கு இருளாயிருப்பவன்.

‘அனைவர்க்கும் மெய்ப்பொருளாய் உள்ளவனே! துணையின்றித் தவிக்கும் உயிர்கட்குப் புகலிடமாய் உள்ளவனே! அன்பொடு அமுதுாட்டும் தாயைக்கூட நீ என் தாயல்ல என்று கூறும் அறியாமை நிறைந்த குழந்தைகள் உண்டு. அனைத்திற்கும் தாயாக இருக்கும் உன் புகழை அக்குழந்தைகள்போல் இல்லையென்றோ, இகழ்ந்தோ பேசுபவர்களும் உண்டு. அத்தகையவர்கள் அச்சம் (வெருளே) அடைவதற்குக் காரணமாக உள்ளவனே! என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

முரண்பாட்டின் இடையே முழுமுதலைக் காண்டது தமிழர்களின் தனிச்சிறப்பு என்பது முன்னரும் குறிக்கப் பெற்றுள்ளது. 'இருளே, வெளியே' என்பதும் முரண்பட்ட இரு முனைகளாம். இருள் (அஞ்ஞானம்) உள்ள இடத்தில் வெளிவிளக்கம்) இராது; வெளி உள்ள இடத்தில் இருள் இராது என்றுதான் நாம் நினைக்கிறோம். அதனால் இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் கருதுகிறோம். முரண்பாட்டைக் கடந்தவன் முழுமுதல் என்பதை 'இருளே வெளியே’ என்றும் 'இக பரமாகி இருந்தவனே' என்றும் அடிகளார் கூறுகிறார்.