பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 187


தழிச் சிறை நீரில் பிறைக் கலம்
      சேர்தரு தாரவனே 47

பணிலம்-சங்கு. வெண்மணி-முத்து. மந்தாகினி-கங்கை. நுந்தும்-செலுத்தும். தழிச்சிறைநீரில்-தழுவிய பக்கங்களையுடைய தேவகங்கையில். பிறைக்கலம்-பிறையாகிய தோணி. பழிப்பு இல் நின் பாதப் பழந் தொழும்பு-புகழப்படுகின்ற நின் திருவடிக்கு அடிமை. மந்தாரம்-மந்தார மலர்

திருவடிப்பேறு எய்த முடியாதவர்கள்கூட, தம் வினையை நொந்துகொள்வார்களே அன்றி, அத் திருவடியைப் பழிப்பதில்லை. ஆதலின் 'பழிப்பு இல் நின் பாதம்’ என்றார்.

‘பழம்தொழும்பு’ என்ற தொடரால் குருநாதருடன் இருந்த பழைய அடியார்களைக் குறிப்பிடுகின்றார்.

‘தொழும்பு எய்தி’ என்றதால் அந்த அடியார் கூட்டத்தினிடையே சில நேரம் இருக்கச்செய்த சிறப்பைக் கூறினாராயிற்று.

‘விழப் பழித்து விழித்து இருந்தேனை' என்றதில் உள்ள ‘விழ’ என்ற சொல் அந்த அடியார் கூட்டத்தின் உடன் செல்லாமல் தாம் தனியே விடப்பட்டமையைக் குறிப்பதாகும்.

விடுபட்டுப்போனதற்குத் தாமும், தம் பொய்யுமே காரணம் என்று நினைந்து பாடியுள்ளமை காண்க. எனவே, தம்மைத் தாமே பழித்துக்கொண்டமையைப் 'பழித்து’ என்ற சொல்லால் கூறினார்.

‘விழித்திருந்தேனை' என்பதற்குச் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தேன் என்பது ஒரு பொருள். அன்றியும் விழித்துக்கொண்டே இருந்தும்கூடத் தம் கவனக் குறைவால் விழ நேரிட்டது என்றதால், தம்மைத் தாமே பழித்தல் இயல்பாயிற்று என்பது மற்றொரு பொருளாகிறது.