பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 215


குருகு-நாரை, பறவைப் பொதுப் பெயருமாம். ஏழில்-ஏழு துளைகளையுடைய துளைக்கருவி; நாத சுரம். கேழில்-ஈடு இணையற்ற, வாய்-வாயில். ஆழியான்-ஆக்ஞாசக்கரமுடைய இறைவன். ஏழை-உமை.

சென்ற இரு பாடல்களைப் போலவே இப்பாடலும் புறத்தே நிற்பவர்கள் கூற்றாகவே அமைந்துள்ளது. வீட்டில் வளர்கின்ற கோழி, உறக்கம் கலைந்து கூவியவுடன் மரங்கள் முதலியவற்றில் வாழும் பறவையினங்கள் விழித்து ஒலியெழுப்பத் தொடங்கின. பறவையினங்கள் இவ்வாறு ஒலியெழுப்ப, மக்கள் விழித்தெழுந்து 'ஏழில்’ என்று சொல்லப்படும் நாதஸ்வரத்தையும் வெண் சங்குகளையும் இசைக்கத் தொடங்கினர்.

‘சொற்கள் இல்லாமல் ஓசை அளவிலும் இசை அளவிலும் மேலே கூறிய குருகுகளும் வெண் சங்குகளும் ஒலிக்கின்ற அதே நேரத்தில், ஒப்பு உவமை இல்லாத மாபெரும் கருணையின் வடிவே என்றும், ஒப்பு உவமை இல்லா விழுப்பொருளே என்றும் பொருள் பொதிந்த சொற்களால் அவன் புகழைப் பாடினோம். தோழி! சங்கு முதலியவற்றின் ஓசைக்காவது நீ எழுந்திருந்திருக்கலாம். அதுதான் இல்லையென்றாலும் எங்கள் பாட்டிற்காவது எழுந்திருந்திருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்த பொழுதும் நீ எழவில்லை என்றால், இது எப்படிப்பட்ட உறக்கம்! நீ வாழ்வாயாக’

‘விழித்திருக்கின்றபொழுது இறைவனிடத்து ஆழியான் கொண்டிருந்த அன்புக்கு என்னுடைய அன்பு குறைந்ததன்று. ஆழியானாவது ஏதோ ஒரு பொருளை இறைவனிடம் வேண்டி அன்புசெய்தான். இறைவனது அருளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. அன்பை அன்புக்காகவே செய்கின்றேன் என்றெல்லாம் சொல்லுவாயே, உனது அன்பு எத்தகையது என்று இப்பொழுது புரிந்துகொண்டோம்.'