பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 289



182.

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
"கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு அக் கோவால் :மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் 8

பண்சுமந்த பாடற்பரிக-பண்ணைத்தாங்கிய பாடல்களை ஆக்கும் தன்மை. விண்கந்த கீர்த்தி-விண்ணுலகில் வியாபித்த புகழ். மொத்துண்டு-அடிபட்டு. கோ-வரகுண பாண்டியன்.

‘பண் சுமந்த பாடல்’ என்பது இறைவன் புகழைப் பாடும் இசைப்பா என்ற பொருளைத் தரும். அடிகளாரைத் தவிர ஏனைய மூவரும். பண் சுமந்த பாடல்களைப் பாடினார்கள். எனவே, இந்த அடி அவர்கள் பாடிய பாடல்களைக் குறிக்கும் என்று பொருள் கூறுவாரும் உளர். அடிகளார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆதலின், இவ்வாறு பொருள் கொள்வதிலும் தவறில்லை. இவ்வாறு கொள்ளாமல் பண்ணோடு கூடிய இசைப்பாக்களைப் பாடுகின்றவர்கள் யாராக இருப்பினும் அப்பாடலுக்கு இரங்கி, வீடுபேறு முதலியவற்றைத் தருபவன் என்று பொதுவாகவே பொருள் கொள்ளலாம். இங்ஙனம் கருணையுடைய பெருமானின் புகழ், இவ்வுலகம் முழுவதும் நிறைந்து மேலுலகம் வரையில் சென்றது என்ற பொருள்பட 'விண்சுமந்த கீர்த்தி' என்றார்.

கீர்த்தி என்ற சொல்லை இரண்டாவது முறையாக அடிகளார் பயன்படுத்துகிறார் என்பதும் அறியத்தக்கது. புகழ் என்னும் பொருளை உடைய கீர்த்தி என்னும் வடசொல்லை இவர்க்கு முன்னர் யாரும் பயன்படுத்த வில்லை. ஆதலால், அடிகளார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று நினைப்பதில் தவறில்லை.