பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 297


ஆதலின், 'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாடு’ என்றார்.

‘பாண்டி நாடே பழம்பதியாகவும்' (திருவாச2.18) என்று முன்னர்க் கூறியுள்ளார். அதே கருத்தை இங்குத் 'தண்பாண்டி நாட்டானை’ என்று கூறுகின்றார்.

தண் பாண்டி நாட்டிற்குத் 'தமிழ் அளிக்கும்’ என்று அடை தந்ததால் கண்ணுதல் பெருமான் தானும் ஒரு புலவனாய்ச் சங்கம் ஏறித் தமிழாய்ந்தான் என்று கூறுதலும் பொருந்தும்.

அடியார்கள் விரும்பிப் போற்றிப் பரவுகின்ற திருப்பெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி அடிகளாரை ஆட்கொண்ட சிறப்பு முன்னரும் பல இடங்களில் கூறப் பெற்றுள்ளது.

இப்பாடலிலும் 'அண்ணாமலையான்' என்ற சொல் வருதலின் இது திருஅண்ணாமலையில் பாடப்பெற்றது என்று கூறுவாரும் உளர்.

அடிகளார் எந்த ஊரில் எந்தப் பதிகத்தைப் பாடினார் என்று கூறுவதற்குரிய ஆதாரங்கள் ஏதுமில்லை. திருவாதவூரடிகள் புராணம் முதலியவை சேக்கிழாரைப் போன்ற சரித்திர அறிவு மிக்கவரால் பாடப் பெறவில்லை. எனவே அவற்றை ஆதாரமாகக்கொண்டு இந்தப் பதிகங்கள் எந்த ஊரில் பாடப்பெற்றவை என்று கூறுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. அன்றியும் தோழி கூற்றுப்போன்று சில பாடல்கள் அமைந்திருப்பதாலேயே இப்பாடல்களை அகத்திணை இலக்கணத்தில் புகுத்தி, தோழி கூற்று, தலைவி கூற்று, இயற்படமொழிதல், இயற்பழித்து மொழிதல் என்ற தலைப்புகளுள் அடக்கிப் பொருள்கூறுவதும் பொருந்துமாறில்லை.