பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 313


பேரானந்தம்-நாம் சிவத்தைப் பற்றுவதற்காக நம்மை வந்து பற்றிய சிவானந்தம்.

இப்பாடலின் முதலிரண்டு அடிகள், அடிகளார் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சியாகும். பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் குதிரைச் சேவகனாக வந்தவன், வந்த கூட்டத்தின் தலைவன் என்று கருதினார்களே தவிர, அவன் இன்னான் என்று அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அக்கூட்டத்திலிருந்த அடிகளார்மட்டும் குதிரைச் சேவகனாக வந்தவன் ஆலவாய்ச் சொக்கன் என்பதை அறிந்துகொண்டார்.

தாம் செய்த குற்றங்களையெல்லாம் மன்னித்து, அவன் மாட்டுக் கொண்ட உள்ளன்பு என்ற குணத்தைமட்டும் ஏற்றுக்கொண்டு அருள்செய்ய வந்துள்ளான் என்பதை உணர்கின்றார் அடிகளார். அந்த அருள் மற்று ஒன்றையும் செய்தது.

அமைச்சராக இருந்த பெருமகனார்க்குச் சுற்றம் என்ற பெயரில் நூற்றுக் கணக்கானவர் இருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. இந்த வாழ்க்கையை வெறுத்து அடிகளார் புறப்படுவதாக இருந்தால் இந்தச் சுற்றத்தார் அவரை விடப் போவதில்லை. அதிகாரம் உடையார் என்ற காரணத்திற்காக, அவரைச் சுற்றிய சுற்றமாகும் இது. எனவே, அவர் அதிகாரத்தை விட்டுப் போகிறார் என்றால், அச்சுற்றத்தார் குறுக்கே நின்று அவர் போக்கைத் தடை செய்திருப்பர் என்பதிலும் ஐயமில்லை. எனவேதான், 'சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான்’ என்று பாடுகின்றார். இது உண்மையில் நிகழ்ந்திருக்கும் என்பதை சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள், பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் (திருவா: 4-48) என்று அடிகளார் முன்னர்க் குறிப்பிட்டுள்ளமையின் அறியலாம்.