பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இயல்பாகவே உயிரைப் பற்றியுள்ள பற்றை அறுக்க வேண்டுமாயின் அதற்குரிய ஒரே வழி இறைவன் திருவடிகளைப் பற்றுவதே ஆகும்.

‘பாசத்தைப் பற்று அற’ என்று கூறியது நோக்கத்தக்கது. 'பற்றற' என்பது வேரோடு களைய என்ற பொருளைத் தரும். அவன் திருவடிகளைப் பற்றி நின்றாலொழிய நம்முடைய அகப், புறப் பற்றுக்களை வேரொடு களைதல் இயலாத காரியம்.

அவனுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டால் நம்மில் நிறைந்திருக்கின்ற பற்று முற்றிலுமாக அறுபடும் எனறார்.

மனத்தின்கண் நிறைந்துள்ள அகப், புறப் பற்றுக்கள், முற்றிலுமாக அழிந்துவிட்டால் அவை இருந்த இடம் காலியாக இருக்குமே? பற்றறுத்தல் என்பது எதிர்மறைச் செயலாகும். எதிர்மறைச் செயல் என்றும் நிறைவை உண்டாக்காது. எனவே, இந்த நுணுக்கத்தை அறிந்த அடிகளார் பற்று அறுபட்டவுடன், அந்த இடம் காலியாக இல்லை, அந்த இடத்தில் பேரானந்தம் வந்து குடிகொண்டு விட்டது என்ற மிக அற்புதமான நுண்ணிய கருத்தைப் ‘பற்றிய பேரானந்தம்’ என்று பேசுகிறார்.

இக்கருத்து முழுவதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

(திருக்குறள்-350)

என்ற குறளின் முழு விளக்கமாக அமைத்திருத்தலைக் காணலாம்.