பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 387


தலைவி, உடன் வந்த தோழியர் ஆகிய அனைவரின் பொறி புலன்களும் இக்கட்டளைக்களுக்குக் கீழ்ப்படிந்து விட்டன. ஆதலின், உள்ளத்தில் கொண்ட உறுதிப்பாட்டின் விளைவாக அனைவரும் சேர்ந்து இறைவனைத் துதிக்கத் தொடங்குகின்றனர். அதுவே ‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ (174) என்ற பாடலாகும்.

இப்பாடல் (174) முழுவதும் இறைவனின் திருவடிப் பெருமை பேசுகின்றது. உயிர்கள் அனைத்தும், கூர்தல் அறத்தின் அடிப்படையில் புல்லாய்ப் பூடாய்த் தொடங்கி, மானிட வாழ்க்கையில் புகுந்து, அதிலும் சில பிறப்புக்கள் கடந்து, கடைசியாகத் ‘தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி' மேலும் வளர்ந்து, நிறைவாகத் திருவடி தரிசனம் பெற்று உய்கதி அடைகின்றன. ஆதலால், அத்திருவடிப் பெருமையை இப்பாடல் முழுவதிலும் கூறியுள்ளார்.

திரு அம்மானை

தைந் நீராடல் என்ற பழைய பெயர் மறைந்து, மார்கழி நீராடல் என்ற பெயர் நிலைத்துவிட்ட காலத்தில் தோன்றிய அடிகளார், மகளிர்விளையாட்டில்கூட ஆன்ம வளர்ச்சி பெறமுடியும் என்பதை உணர்த்துவார்போலத் திருவெம்பாவை பாடினார். அதன் இறுதியில் இறைவன் திருவடிபற்றியே ஒரு முழுப்பாடல் முகிழ்த்தது.

மூவர் தேவாரங்களில் இறைவன் திருவடி பேசப்பெறினும், அவன் இறைவனாகவே இருந்து செய்த வீரச் செயல்களே மிகுதியாக இடம் பெற்றன. திருவாசகத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நூற்றுக் கணக்கான பாடல்களில் குறிப்பாகத் திருவடியே பேசப்பெறுகிறது. இதன் காரணத்தைச் சிந்தித்தால் அதனை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.