62 * திருவாசகம் - சில சிந்தனைகள் – 2
மிகச் சிறந்ததான நெய், பாலில் மறைந்திருப்பதுபோல் அத்திருவடியினுள் வீடுபேறு என்ற நெய் மறைந்திருத்தலின் பால் என்றார்.
கரும்பை ஆலையுள் பெய்து சாறாக்கிப் பின்னர் அதனைத் தீயிலிட்டுக் காய்ச்சிய பிறகு கிடைப்பது கட்டியாகும். திருவடியை நினைத்து அன்பு செய்வார்க்கு எவ்விதத் துன்பமும் இல்லாமல் வீடுபேற்றை அருளுதலின் கட்டி என்றார். அதாவது கரும்பு ஆலையில் பிழிபடுவது போலவும், அதன் சாறு தீயிலிட்டுக் காய்ச்சப்படுவது போலவும் விரதம், பட்டினி, சடங்குகள் ஆகியவற்றால் இவ் உடம்பை வருத்தி, பின்னர் வீடுபேற்றை அடைவதற்குப் பதிலாகத் திருவடியில் அன்புசெய்வார் உடனே வீடு பேற்றை அடைதலின் அந்தத் திருவடியைக் கட்டி என்றார்.
41.
வினைஎன் போல்உடையார் பிறர்ஆர்
உடையான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு
அன்றுமற்று அதனாலே
முனைவன் பாத நல்மலர் பிரிந்து இருந்து நான்
முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி
இன்னது என்று அறியேனே 37
தினையின்பாகம்-தினையளவு இடமும் தினையளவுகாலமும். முட்டிலேன்-மோதிக்கொள்ளேன். தலைகீறேன்-தலையைப் பிளந்து கொள்ளேன். பாவனை-நினைவு.
ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் திடீரென்று அப்பொருள் தம்மை விட்டு நீங்கியபோது என் விதி அதனை அனுபவிக்க விடாமல் நீக்கி விட்டது என்று கூறுவர். இந்த உலக வழக்கை அனுசரித்துத் தம்முடைய அனுபவம் விட்டுப்