ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 162
சங்குமணித் தோடுகள், இரு காதுகளில் இரு புறமும் ஊசல் ஆடும். அதைப்போல், ஆண்டாளே! நீயும் பொன்னுரசல் ஆடுவாய். புதுவை நகர் மன்னர் வதுவைக்கு அமைந்துளாய் கோதையே! பொன்னுரசல் ஆடிஅருள்!
மண்திணி நிலப்பிலம் போழ்ந்துவேர் வீழ்ந்துபுடை
மல்குபொரி அரையஆ கும் மாகத்தின் வெளிமூடு பூகப்பொ தும்பரொடு
மழைகிழித்து ஓங்குபொங் கர்த்
தண்தளிர்க் காழ்அகில் சோலைவாய் மாலையில்
தவளவெண் நிலவை நுக ரும் சகோரப் பெரும்புள்ளின் பேழ்வாய் நிறைந்துவழி
தண்அமுதம் மொண்டுபரு கும் தொண்டைஅம் கனிவாய் மடந்தையரும் மைந்தரும்
சுரரின்நரை திரைமூப் புறாச் சோதிஆ கம்பெறப் பெருகுதிரு முக்குளத்
துறையினுடன் நறைகமழும் மென்
புண்டரீ கத்தடம் செறிதமிழ்ப் புதுவையாய்!
பொன்னூசல் ஆடியரு ளே!
பொன்னரங் கத்தர்வட மலைவாணர் இன்புறப்
பொன்னூசல் ஆடியரு ளே! (105)
மண் அணுக்கள் செறிந்த நிலத்தின் கீழ் மண்ணைப் பிளந்து வேர் விட்டு வளர்ந்தன பாக்கு மரங்கள். அவை அடிப்புறம் பருத்திருந்தன. பொருக்குக்களையுடையன. ஆதலால் அவற்றின் அடிமரங்கள் பொரியரை எனப் பெயர் பெற்றன. அவை உயரமாக வளர்ந்து வாகன வெளியை முடியிருந்தன.
அத்தகைய பாக்கு மரங்களின் இளமரச் சோலைகளும், முகிலைக் கிழித்து ஓங்குகின்ற பலவகைச் சோலைகளும், தண்ணிய தளிரும் திண் மையுமுடைய அகில்மரச் சோலைகளும் நிறைந்த இடங்களில் மாலை நேரத்தில் மிக்க வெண் நிலவை மட்டும் உண்கின்ற சகோரம் என்னும் பெருமையுடைய பறவைகளின் பிளந்தவாய் நிறைந்து ஒழுகும் நிலவமுது, கோவைக் கனி போலச் சிவந்த வாயையுடைய மங்கையரும் அவர்களின் காதலரும் மொண்டு பருகியதால், தேவர்கள்போல் நரை, திரை, மூப்பு அடையாமல் ஒளியுடம்பு பெறுவர்.