216 அச. ஞானசம்பந்தன்
அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றில் வீடும் விரவி வருமாறு கூறுவது பழைய முறை. பழைய நூல்கள் யாவும் இம்முறை வழியே பிறந்தன. இடைக்காலத்தில் தோன்றிய நூல்களும் உரைகளும் பழங் கொள்கையைக் கலக்கிவிட்டன. இதற்குக் காரணம் காலப்போக்கென்று கூறுவது பொருத்தம். திருவள்ளுவர் முப்பாலே வகுத்தருளினர்.
நாளடைவில் வீட்டைப்பற்றிய தனி நூல்கள் பெருகின. இவைகளுள் மிகச் சிலவே பழங் கொள்கைக்குத் துணை போவன. பல, அறம் பொருள் இன்ப வாழ்வில் பொருளற்ற நிலையாமையையும், இயற்கையை வெறுத்தல்-பெண்ணை வெறுத்தல் என்னும் போலித் துறவையும் நுழைத்து நல்வாழ்வுக்கு இடர் செய்தன. இந் நூற் பெருக்கால், அறம்பொருள்- இன்ப வாழ்வு அருகுவதாயிற்று. மக்கள் எண்ணம், அறம் பொருள் இன்பக் கலப்பற்ற போலி வீட்டில்-வெறும் பாழில்-படிந்தது. இந் நாளில் உலகம் எக் காட்சி வழங்குகிறது? கொலையுங் களவுங் கள்ளுங் காமமும் பொய்யுந் தாண்டவம் புரியாத இடமும் உளதோ?
தனித்த வீடென்று அறம் பொருளின்ப வாழ்வை வெறுக்க ஏவும் நூல்களை இயற்றுவது பாவம். அறம் பொருள் இன்ப வாழ்வின் பயன் வீடாயிருத்தலான். வீட்டைத் தனியே பிரித்துக் கூறுவது எற்றுக்கு? இது வெறும் பாழைக் கூறுவதாக வாக்கு மனமுடைய மக்களால் கொள்ளப்படும். அறம் பொருள் இன்ப வாழ்வுக்குரிய நூல் செய்வோரே உலகுக்கு நலஞ் செய்வோராவர். - -
அறம்-பொருள்-இன்பம் அற்ற தனித்த வீட்டு நூல்களால் உலகம் உற்ற அல்லல் போதும்; போதும்.