பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

உடனே சேவகர்களைப் பார்த்து, "ஐயா சேவகர்களே! நீங்கள் இருதிறத்தாரும் பேசிக்கொண்டதை எல்லாம் நான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பேரிலும் தப்பிதமில்லை. அவர்கள் பேரிலும் தப்பிதமில்லை. திவான் ஏற்படுத்திய இந்த வரி உத்தரவு நியாயமானதோ அநியாயமானதோ என்பதை ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு அதிகாரமில்லை. ஆகையால், நீங்கள் தாட்சனியமின்றி உங்களுடைய கடமையைச் செலுத்தியது நியாமான காரியமே. அதுபோல, அவர்கள் சொல்வதும் நியாய மாகவேபடுகிறது. அநாதையாக நாறிக் கிடந்த ஒரு பிணத்தைப் பொதுஜன நன்மையைக் கருதி அவர்கள் எடுத்து வந்ததைக் குறித்து அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து, அவர்களுக்குச் சன்மானம் செய்ய வேண்டுவது நியாயமாக இருக்க, அவர்களிடம் வரிப்பணம் கேட்பதும், பிணத்தை மறுபடி ஊருக்குள் தூக்கிக்கொண்டு போகச் சொல்வதும் தர்மமல்ல. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த ஊர் மகாராஜன் இம்மாதிரி பிணத்திற்கு வரிபோட வேண்டுமென்பது ஒரு நாளும் உத்தரவு செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும் இந்த ஊர் மகாராஜனுக்குச் சொந்தக் காரன்தான். அவருடைய மனப்போக்கு எனக்கு நன்றாகத் தெரியும். அநேகமாய் இந்த உத்தரவை திவான்தான் பிறப்பித்திருக்க வேண்டும். அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்த காலத்தில், இப்படி அநாதையாக இறப்பவர்களிடம் வரி விதிக்க வேண்டாம்என்று உத்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனசில் பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இந்த அநாதைப் பிணத்தை இவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோய்ப் புதைக்கும்படி நீங்கள் விட்டு விடுங்கள். நான் உடனே திவானிடம் போய் இதைப்பற்றி விசாரித்து, இப்போது இங்கே நடந்த விஷங்களைத் தெரிவித்து, இதற்குத் தக்க புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். இப்போது இந்தப் பிணத்தைப் புதைக்க நீங்கள் அநுமதி கொடுத்ததைப்பற்றி உங்கள்மேல் குற்றம் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்றார்.

அதைக் கேட்ட சேவகர்களுள் ஒருவன், 'ஐயா! அந்த வம்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம். யாரோ வழியில் போகிறவராகிய உம்முடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு நாங்கள்

53